திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/பாரூக்கு (எரேமியாவின் மடல்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


பாரூக்கு (The Book of Baruch)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

1 "எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ரயேலின் கடவுளே,


கடுந்துயரில் உழலும் ஆன்மாவும் கலக்கமுறும் உள்ளமும்
உம்மை நோக்கிக் கூக்குரலிடுகின்றன.
2 ஆண்டவரே, இக்குரலுக்கு செவிசாய்த்தருளும்,
எங்களுக்கு இரக்கம்காட்டும்;
ஏனெனில் நாங்கள் உம் முன்னிலையில் பாவம் செய்தோம்.
3 நீர் என்றென்றும் ஆட்சி செலுத்துகிறீர்.
4 நாங்களோ எந்நாளும் அழிந்து கொண்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ரயேலின் கடவுளே,
இஸ்ரயேலர் நாங்கள் இறந்தவர்களைப்போல் ஆகிவிட்டோம்.
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்;
தங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய உமது குரலுக்குச் செவிசாய்க்காமல்,
உம் முன்னிலையில் பாவம் செய்தோருடைய மக்களின் வேண்டுதலையும் ஏற்றருளும்.
அவர்களது செயலால்தான் எங்களை இக்கேடுகள் சூழ்ந்துள்ளன.
5 எங்கள் மூதாதையரின் முறைகேடுகளை நினைவில் கொள்ளாதீர்.
மாறாக, இக்கட்டான இந்நேரத்தில் உம் கைவன்மையையும் பெயரையும் நினைவுகூரும்.
6 நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
ஆண்டவரே, உம்மையே நாங்கள் உம்மைப் போற்றுவோம்;
7 ஏனெனில், நாங்கள் உம்மைத் துணைக்கு அழைக்கும் பொருட்டே,
உம்மைப் பற்றிய அச்சத்தை எங்கள் உள்ளத்தில் பதித்துள்ளீர்.
நாடுகடத்தப்பட்ட இந்நிலையில் நாங்கள் உம்மைப் புகழ்கிறோம்;
ஏனெனில் உம் முன்னிலையில் பாவம் செய்த
எங்கள் மூதாதையரின் தீச்செயல்கள் அனைத்தையும்
எங்கள் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டோம்.
8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே,
உம்மைவிட்டு விலகிச் சென்ற எங்கள் மூதாதையரின்
எல்லாத் தீச்செயல்களையும் முன்னிட்டு,
இதோ! நீர் எங்களைச் சிதறடித்துள்ள இடத்தில்
இன்று அடிமைகளாய் இருக்கிறோம்;


இகழ்ச்சிக்கும் சாபத்திற்கும் தண்டனைக்கும் நீர் எங்களை ஆளாக்கியிருக்கிறீர்."

ஞானத்தின் புகழ்ச்சி[தொகு]


9 இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்;
செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்.


10 இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்?
வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்?
இறந்தவர்களோடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்?


11 பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்?


12 ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய்.


13 கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால்,
என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய்.


14 அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே இருக்கிறது,
அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள்.
இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன,
கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய்.


15 ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்? [1]


16 வேற்றினத்தாரின் தலைவர்கள் என்ன ஆனார்கள்?
மண்ணுலகின்மீது காட்டு விலங்குகளை அடக்கியாள்வோர் என்ன ஆயினர்?


17 வானத்துப் பறவைகளைக்கொண்டு விளையாட்டில் ஈடுபடுவோர் எங்கே?
பொன்னையும் வெள்ளியையும் குவித்து வைப்போர் எங்கே?
மனிதர் இவற்றில் நம்பிக்கை வைக்கின்றனர்.
அவர்களது ஆசைக்கு ஓர் அளவில்லை.


18 அவர்கள் பணம் சேர்க்கத் திட்டம் தீட்டினார்கள்;
அதே கவலையாய் இருந்தார்கள்;
ஆனால் அவர்களது வேலையின் சுவடு ஒன்றும் காண்பதற்கில்லை.


19 அவர்கள் அனைவரும் மறைந்து விட்டார்கள்;
பாதாளத்திற்குச் சென்றுவிட்டார்கள்;
அவர்களுக்குப் பதிலாக வேறு மனிதர் தோன்றினர்.


20 பிந்திய தலைமுறையினர் ஒளியைக் கண்டனர்;
மண்ணுலகில் குடியிருந்தனர்;
ஆனால் மெய்யறிவின் வழியை அறிந்திலர்;


21 அதன் நெறிகளைக் கண்டிலர்; அதை அடைந்திலர்;
அவர்களுடைய மக்கள் ஞானத்தின் [2] வழியைவிட்டுத் தொலைவில் சென்றார்கள்.


22 கானான் நாட்டில் அதைப்பற்றிக் கேள்விப்பட்டவர் யாருமில்லை;
தேமான் நாட்டில் அதைக் கண்டவர் எவருமில்லை. [3]


23 மண்ணுலகின்மீது அறிவுக் கூர்மையைத் தேடும் ஆகாரின் மக்களும்
மெரான், தேமான் நாட்டு வணிகர்களும்
கட்டுக் கதை புனைவோரும் அறிவுக் கூர்மையை நாடுவோரும்
ஞானத்தை அடையும் வழியை அறிந்து கொள்ளவுமில்லை;
அதன் நெறியை எண்ணிப் பார்க்கவுமில்லை.


24 இஸ்ரயேலே, கடவுளின் இல்லம் [4] எத்துணைப் பெரிது!
அவரது ஆட்சிப் பரப்பு எத்துணை விரிந்தது!


25 அது மிகப் பெரிது, எல்லையற்றது!
உயர்ந்தது, அளவு கடந்தது!


26 அங்கேதான் அரக்கர்கள் தோன்றினார்கள்;
தொடக்கமுதல் புகழ்பெற்றிருந்த அவர்கள் மிகவும் உயரமானவர்கள்,
போரில் வல்லவர்கள். [5]


27 எனினும் கடவுள் அவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை;
மெய்யறிவின் வழியை அவர்களுக்குக் காட்டவுமில்லை.


28 அறிவுத்திறன் இல்லாததால் அவர்கள் அழிந்தார்கள்;
தங்கள் மடமையால் மடிந்தார்கள்.


29 வானகத்திற்கு ஏறிச்சென்று, ஞானத்தைப் பெற்றுக் கொண்டவர் யார்?
முகில்களினின்று அதைக் கீழே கொணர்ந்தவர் யார்?


30 கடல் கடந்து சென்று அதைக் கண்டுபிடித்தவர் எவர்?
பசும்பொன் கொடுத்து அதை வாங்குபவர் எவர்?


31 அதை அடையும் வழியை அறிபவர் எவருமில்லை;
அதன் நெறியை எண்ணிப் பார்ப்பவருமில்லை.


32 ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்;
தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்;
மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்;
அதைக் கால்நடைகளால் நிரப்பினார்.


33 அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது.
அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது.


34 விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. [6]


35 அவர் அவற்றை அழைத்தார்;
அவை, "இதோ, உள்ளோம்" என்றன;
தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. [7]


36 இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர்,


37 மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே;
தம் அடியார் யாக்கோபுக்கும்,
தாம் அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும்
மெய்யறிவை ஈந்தவரும் இவரே.


38 அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று;
மனிதர் நடுவே குடிகொண்டது.


குறிப்புகள்

[1] 3:15 = யோபு 28:12,20.
[2] 3:21 - "அவர்களின்" என்பது மூல பாடம்.
[3] 3:22 = எரே 49:7.
[4] 3:24 - இங்குப் படைப்பு முழுவதையும் குறிக்கும்.
[5] 3:26 = தொநூ 6:4; சாஞா 14:6.
[6] 3:34 = சீஞா 43:10.
[7] 3:35 = யூதி 9:6; யோபு 38:35.

அதிகாரம் 4[தொகு]


1 ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்;
என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். [1]
அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்;
அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர்.


2 யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்;
அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட.


3 உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே;
உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே.


4 இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்;
ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.

எருசலேமின் புலம்பலும் நம்பிக்கையும்[தொகு]

புலம்பல்[தொகு]


5 இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர்.


6 நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று;
நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப்பட்டீர்கள். [2]


7 கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால்
உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். [3]


8 உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள்;
உங்களை ஊட்டிவளர்த்த எருசலேமை வருத்தினீர்கள்;


9 கடவுளின் சினம் உங்கள்மீது வரக்கண்டு எருசலேம் கூறியது:
"சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள்;
கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார்.


10 ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய
அடிமைத்தனத்தை நான் கண்டேன்.


11 மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்;
ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன்.


12 நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள்.
என்பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்;
என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன்.
ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தைவிட்டு விலகிச் சென்றார்கள்.


13 கடவுளுடைய நெறிமுறைகளை அவர்கள் அறிந்திலர்;
அவருடைய கட்டளைகளின் வழியில் சென்றிலர்;
நற்பயிற்சியின் நெறியில் அவர்தம் நீதியின்படி நடந்திலர்.


14 "சீயோனின் அண்டை நாட்டார் கூடிவரட்டும்;
என் புதல்வர், புதல்வியர்மீது என்றுமுள்ளவர் சுமத்திய
அடிமைத்தனத்தை எண்ணிப்பார்க்கட்டும்.


15 ஏனெனில் அவர்களுக்கு எதிராய்த் தொலையிலிருந்து ஒரு நாட்டையும்
வேற்று மொழி பேசும் இரக்கமற்ற மக்களினத்தையும் கடவுள் கொண்டு வந்தார்.
அவர்கள் முதியோரை மதிக்கவில்லை. சிறுவர்களுக்கு இரக்கங் காட்டவில்லை.


16 கைம்பெண்ணின் அன்பு மைந்தர்களைக் கடத்திச் சென்றார்கள்;
புதல்வியரிடமிருந்து அவளைப் பிரித்து, தனிமையில் விட்டுச் சென்றார்கள்.


17 "நானோ உங்களுக்கு எவ்வகையில் உதவ இயலும்?


18 இக்கேடுகளை உங்களுக்கு வருவித்தவரால்தான்
உங்கள் பகைவரிடமிருந்து உங்களை விடுவிக்க இயலும்.


19 போங்கள், என் மக்களே, உங்கள் வழியே போங்கள்.
நான் கைவிடப்பட்டவள்.


20 அமைதிக்குரிய ஆடைகளைக் களைந்துவிட்டேன்;
மன்றாட்டுக்குரிய சாக்கு உடை அணிந்துள்ளேன்;
என்றுமுள்ளவரை நோக்கி என் வாழ்நாள் முழுவதும் கூக்குரலிடுவேன்.


21 "என் பிள்ளைகளே, வீறுகொள்வீர்;
கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர்.
பகைவரின் ஆற்றலினின்றும் கைவன்மையினின்றும் அவர் உங்களை விடுவிப்பார்.


22 என்றுமுள்ளவர் உங்களை மீட்பார் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.
தூயவரிடமிருந்து எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது;
ஏனெனில், என்றுமுள உங்கள் மீட்பர் விரைவில் உங்களுக்கு இரக்கங் காட்டுவார்.


23 நான் உங்களைத் துயரத்தோடும் அழுகையோடும் அனுப்பி வைத்தேன்.
கடவுளோ முடிவில்லா மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்
உங்களை மீண்டும் என்னிடம் அழைத்து வருவார்.


24 உங்கள் அடிமைத்தனத்தை இப்பொழுது காண்பதுபோன்று
உங்கள் கடவுளிடமிருந்து வரவிருக்கும் மீட்பையும்
சீயோனின் அண்டை நாட்டார் விரைவில் காண்பர்.
அம்மீட்பு மிகுந்த மாட்சியோடும்
என்றுமுள்ளவரின் போரொளியோடும் உங்களை வந்தடையும்.


25 என் மக்களே, கடவுளிடமிருந்து உங்கள் மீது வந்துற்ற சினத்தைப்
பொறுமையோடு தாங்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் பகைவர் உங்களைத் துன்புறுத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களது அழிவை நீங்கள் விரைவில் காண்பீர்கள்;
அவர்களை ஏறி மிதிப்பீர்கள்.


26 செல்லமாய் வளர்க்கப்பெற்ற என் மக்கள்
கரடு முரடான பாதையில் நடந்தார்கள்;
பகைவர் கவர்ந்து செல்லும் ஆட்டு மந்தைபோன்று
அவர்கள் கடத்திச்செல்லப்பட்டார்கள்.


27 "என் மக்களே, வீறுகொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர்.
இத்துயரங்களை உங்கள்மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவுகூர்வார்.


28 கடவுளைவிட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள்.
அதைவிடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு
இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள்.


29 ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச்செய்தவரே
உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்."

நம்பிக்கை[தொகு]


30 எருசலேமே, வீறுகொள்.
இப்பெயரைக் கொடுத்தவரே உனக்கு ஆறுதல் வழங்குவார்.


31 உன்னைத் துன்புறுத்தி உன் வீழ்ச்சி கண்டு மகிழ்ந்தோர் இரங்கத்தக்கவர்;
32 உன் மக்கள் அடிமைகளாய் இருந்த நகர்களும் இரங்கத்தக்கவை;
உன் மைந்தர்களை அடிமைகளாய் ஏற்றுக்கொண்ட நகரும் இரங்குதற்குரியது.


33 உன் வீழ்ச்சி கண்டு அது மகிழ்ந்ததுபோல,
உன் அழிவு கண்டு இன்புற்றது போல,
தன் பாழ்நிலை கண்டு அது பெருந்துயர் அடையும்.


34 அதனுடைய மக்கள்திரளில் அது கொண்ட இறுமாப்பை அகற்றிவிடுவேன்;
அதன் செருக்கை அழுகையாய் மாற்றி விடுவேன்.


35 என்றுமுள்ளவரிடமிருந்து நீண்டநாள் அதன்மேல் நெருப்பு வந்து விழும்;
பன்னெடுங் காலம் அது பேய்களின் இருப்பிடமாய் அமையும்.


36 எருசலேமே, கீழ்த்திசையை நோக்கு;
கடவுளிடமிருந்து உனக்கு வரும் மகிழ்ச்சியைப் பார்.


37 உன்னை விட்டுப் பிரிந்துசென்ற உன் மைந்தர்கள்
இதோ! திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள்;
கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும்
தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு,
கடவுளின் மாட்சியில் திளைத்த வண்ணம் வந்துகொண்டிருக்கின்றார்கள். [4]


குறிப்புகள்

[1] 4:1 = சாஞா 24:23.
[2] 4:6 = எசா 50:1.
[3] 4:7 = இச 32:17.
[4] 4:37 = எசா 60:4.


(தொடர்ச்சி): பாரூக்கு: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை