அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். “நான் அந்தப் புது வீரனை நடத்துவது தம்பி போல் இருக்கிறதா? என் அண்ணன் என்னை நடத்துவது எப்படியிருக்கிறது? அண்ணன் தம்பிகளாகப் பிறந்த நாங்கள் அண்ணன் தம்பி போல நடந்து கொள்ளவில்லை. ஆனால், எங்கிருந்தோ வந்த இந்த மலைநாட்டு வீரனுடன் நான் பழகுவது அண்ணன் தம்பி போல இருக்கிறது என்கிறார்கள். ஏன் இந்த வேறுபாடு?- இப்படிப்பட்ட சிந்தனைகள் அவன் மனத்தில் இடம் பெற்றன. இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் அவன் உள்ளத்திலே வளர்ச்சி பெற்றன.
அந்த மலைநாட்டு வீரன் அவனிடம் மிக அன்பாகப் பழகினான். பண்பாக நடந்து கொண்டான். அவன் ஒரு வேலையை, சொல்லி முடித்த சிறிது நேரத்திற்குள் செய்து முடித்தான். அவன் செய்கை, பேச்சு, புன்சிரிப்பு ஒவ்வொன்றும் வடுகநாதனின் உள்ளத்தில் அன்புணர்ச்சியைத் தூண்டுவனவாகவே இருந்தன.
இந்த அன்புணர்ச்சி வளர வளர, அண்ணனுடன் போயிருந்து தம்பியாக வாழ வேண்டுமென்ற ஒருவிதமான ஆவலும் அவன் உள்ளத்தே தோன்றி வளர்ந்தது. ஆனால் அந்த ஆவலுக்குப் பணி வதற்கு அவனுடைய கர்வ உணர்ச்சி இடங் கொடுக்கவில்லை.
மலைநாட்டு வீரன் ஒருநாள் வடுகநாதனுடன் தனித்திருந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது