பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 நல்வழிச் சிறுகதைகள்

"ஏன் முடியாது? வேண்டுமானால் இருவருமே தாண்டிப் பார்த்துவிடுவோம்" என்றாள் முதலில் கேட்டவன்.

இருவரும் அந்தக் கால்வாயைத் தாண்ட அதன் அருகில் சென்றார்கள்.

முதலில் ஒருத்தி தாவினாள். அவள் கால்வாயைத் தாண்டிவிட்டாள். ஆனால் அவள் தலையில் இருந்த பொன்குடம் கீழே தரையில் விழுந்து தண்ணிர் கொட்டிவிட்டது. குடமும் ஒரு பக்கம் நெளிந்துவிட்டது.

தொடர்ந்து தாவிய மற்றொருத்தியும் கால்வாயைத் தாண்டிவிட்டாள். அவள் தலையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்து விட்டது. சுற்றிலும் தண்ணிர் சிந்தியது.

முதல் பெண் நெளிந்துபோன பொன்குடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிர் மொண்டுவர ஊருணிக்குச் சென்றாள். இரண்டாவது பெண், தாயார் கோபிப்பாளே என்று பயந்து அழுது கொண்டே வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினாள்.


கருத்துரை : - பொன்குடம் உடைந்தால் பொன்னாகவேயிருக்கும். மண் குடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயர்ந்த குணம் படைத்தவர்கள் வறுமையடைந்தாலும் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். இழிந்த குணம் படைத்தவர்கள் வறுமையுற்றால் எவ்விதப் பயனும் அல்லாதவர்களாகி விடுவார்கள்.