பார்ப்பதற்கே ஒடிந்து போன முருங்கை போல் தோற்றமளித்தான். ஊதினா ல் சாய்ந்து விடும் புல்லரும்பு போல் இருந்தான். எலும்பே வடிவமாக இருந்த அந்த மனிதன், திண்ணனிடம் வந்து, தன்னை வைத்துக் காப்பாற்றும்படி வேண்டினான்.
திண்ணனுக்குப் பஞ்சப்பனைப் பார்த்தபோது இரக்கமாக இருந்தது. தான் காப்பாற்றா விட்டால் அவன் இறந்து போக வேண்டியதுதான் என்று எண்ணினான். ஆகவே, அவனைத் தன்னிடத்தில் வைத்துக் கொண்டான்.
பஞ்சப்பனுக்காகத் திண்ணன் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கவில்லை. ஓர் இட்டிலிக்கு மேல் அவனால் சாப்பிட முடியாது. இரண்டு கவளம் சோற்றுக்கு மேல் அவன் தொண்டையில் இறங்காது.
உணவு செல்லாததால் உடலிலும் வலுவில்லாமல் இருந்தான் பஞ்சப்பன். பிறவியிலேயே அவனுக்கு இந்த மாதிரிக் கோளாறு இருந்ததால், பின்னால் அவனால் தன் உடலை வளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
பஞ்சப்பன் வலிமை சிறிதும் அற்றவனாக இருந்தும், அவன் வந்த பிறகு, திண்ணனின் புகழ் பெருகியது. புகழ் காரணமாக அவனுக்குச் செல்வமும் குவிந்தது. எல்லாம் பஞ்சப்பன் வந்த நல்ல நேரத்தின் பலன்தான் என்று திண்ணன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான்.