உள்ளடக்கத்துக்குச் செல்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/4வது திருமொழி

விக்கிமூலம் இலிருந்து
  4ம் திருமொழி தெள்ளியார் பலர் 

           கூடல் குறிப்பு

             கலி விருத்தம்

தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்*
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்*
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட*
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே!                                    1

காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்*
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்*
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி* தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே!                                       2

பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்*அணி வாணுதல் தேவகி
மாம கன்*மிகு சீர்வசு தேவர்தம்*
கோம கன்வரில் கூடிடு கூடலே!                                      3

ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட*
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து*
வாய்த்த காளியன் மேல்நட மாடிய*
கூத்த னார்வரில் கூடிடு கூடலே!                                     4

மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி* நந்தெரு வின்நடுவே வந்திட்டு*
ஓடை மாமத யானை யுதைத்தவன்*
கூடு மாகில்நீ கூடிடு கூடலே!                                        5

அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்*கஞ் சனைவஞ் சனையின்
செற்ற வன்*திக ழும்மது ரைப்பதி*
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே!                                   6

அன்றின் னாதன செய்சிசு பாலனும்*
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்*
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ*முன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே!                                   7

ஆவ லன்புடை யார்தம் மனத்தன்றி
மேவ லன்*விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்*கன்று மேய்த்து விளையாடும்*
கோவ லன்வரில் கூடிடு கூடலே!                                    8

கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று*
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்*
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்*
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே!                                  9

பழகு நான்மறை யின்பொரு ளாய்*மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்த*எம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்*
குழக னார்வரில் கூடிடு கூடலே!                                    10

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை*
நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர்*
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய*
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே.                           11

   ஆண்டாள் திருவடிகளே சரணம்