உள்ளடக்கத்துக்குச் செல்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/6வது திருமொழி

விக்கிமூலம் இலிருந்து
     6ம் திருமொழி வாரணமாயிரம் 

மாயவன் தன் கைத்தலம் பற்றக் கனாக் கண்டமை

           கலி விருத்தம்

வாரண மாயிரம் சூழவ லம்செய்து*
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்*
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்*
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                        1

நாளை வதுவை மணமென்று நாளிட்டு*
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்*
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்*ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                            2

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்*
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து*
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை*
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                            3

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி*
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி*
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை*
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                         4

கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி*
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள*
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு*எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                            5

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத*
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்*
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து*என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                        6

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்*
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து*
காய்சின மாகளிறு அன்னானென் கைப்பற்றி*
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீ!நான்.                         7

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்*
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி*
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி*
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                          8

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு*
எரிமுகம் பாரித்து என்னைமுன்னே நிறுத்தி*
அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து*
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                       9

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து*
மங்கல வீதி வலம்செய்து மணநீர்*
அங்கவ னோடும் உடன்சென்றங்கு ஆனைமேல்*
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.                        10

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை*
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்*
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்*
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.                              11

       ஆண்டாள் திருவடிகளே சரணம்