உள்ளடக்கத்துக்குச் செல்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/10வது திருமொழி

விக்கிமூலம் இலிருந்து
     10ம் திருமொழி  கார்க்கோடல் பூக்காள்

      மால் செய்வகையோடு மாற்றம் இயம்பல் 

              கலிநிலைத்துறை
கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல் வண்ணனென் மேல்*உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான்?*
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது*  அணிதுழாய்த் 
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல்லேன் அந்தோ!          1
 
மேற்றோன்றிப் பூக்காள்! மேலுல கங்களின் மீதுபோய்*
மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்*
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்போலச் சுடாது*எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே.            2

கோவை மணாட்டி! நீயுன் கொழுங்கனி கொண்டு*எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர் தம்மை யஞ்சுதும்* 
பாவி யேன்தோன்றிப் பாம்பணை யார்க்கும்தம் பாம்புபோல்* 
நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே.                       3

முல்லைப் பிராட்டி!நீயுன் முறுவல்கள் கொண்டு*எம்மை 
அல்லல் விளைவியே லாழிநங்காய்!உன்ன டைக்கலம்* 
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் 
சொல்லும் பொய்யானால்* நானும் பிறந்தமை பொய்யன்றே.          4

பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்?* நல்வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந்தால்வந்து பாடுமின்*
ஆடும் கருளக் கொடியுடை யார்வந்து அருள்செய்து* 
கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே.                      5

கணமா மயில்காள்! கண்ணபிரான்திருக் கோலம்போன்று*
அணிமா நடம்பயின் றாடுகின்றீர்க்கடி வீழ்கின்றேன்*
பணமா டரவணைப் பற்பலகாலமும் பள்ளிகொள்*
மணவாளர் நம்மை வைத்தபரிசிது காண்மினே.                      6

நடமாடித் தோகை விரிக்கின்றமாமயில் காள்!*உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன்நானோர் முதலிலேன்*
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து*எம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக்கினியொன்று போதுமே?              7

மழையே! மழையே! மண்புறம் பூசியுள் ளாய்நின்ற*
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற*
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்று*  என்னைத் ததர்த்திக்கொண்டூற்றவும் வல்லையே?       8

கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்குறுத்து*
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு* என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்கு*என்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே.                9

நல்லஎன் தோழி! நாகணைமிசை நம்பரர்*
செல்வர் பெரியர் சிறுமானிடவர்நாம் செய்வதென்* 
வில்லி புதுவை விட்டுசித்தர்தங்கள் தேவரை*
வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே.                          10

            ஆண்டாள் திருவடிகளே சரணம்