முதற் காட்சி
15
விருந்து உண்டார். உடனிருந்து தம்மை உண்பித்த அதிகாரியிடம், “இப்போது அரசர்பிரானப் பார்க்கலாமா?” என்று கேட்டார். புலவருக்குக் குமணனைப் பார்க்கவேண்டும் என்று இருந்த ஆர்வ மிகுதியை அதிகாரி நன்கு உணர்ந்தார்.
“எப்பொழுது வேண்டுமானாலும் கண்டு மகிழலாம். ஆனாலும் தாங்கள் இப்போதுதான் உணவு கொண்டீர்கள். உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு என்பார்கள். வழி நடந்த இளைப்பு வேறு இருக்கிறது. ஆதலால் சற்றே படுத்து இளைப்பாறுங்கள். பிறகு மன்னர்பெருமானைக் கண்டு நெடுநேரம் அளவளாவலாமம்” என்றார் அதிகாரி.
“என்னை உங்களுக்கு முன்பு தெரியாது. உங்கள் மன்னர் என்னை அறியும் அளவுக்கு நான் புகழ் படைத்தவன் அல்லேன். அப்படியிருக்க என்னைக் கண்டவுடன் இவ்வளவு உபசாரம் செய்கிறீர்களே! இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்!”
“இது எங்கள் கடமை. அரண்மனை வழக்கம் இது. புலவரென்று யார் வந்தாலும் முதலில் அவர் உணவு கொண்டாரா என்று அறிந்து உண்பிக்க வேண்டும் என்பது அரசர் இட்ட கட்டளை. அவருக்குத் தங்களைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவருக்குத் தமிழைத் தெரியுமே! தமிழினிடம் அவருக்கு உள்ள ஆராக்காதல் எந்தப் புலவராயினும் முன்பின் அறியாமலே உறவுகொள்ளும்படி செய்கிறது. தாங்கள் அவருடன் அளவளாவும்போது அவருடைய இயல்பைத் தெரிந்துகொள்வீர்கள். தமிழ்ப் புலவர்களிடம் அப்பெருமான் காட்டும் அன்புக்கு, நாங்கள் காட்டும் அன்பு எம் மாத்திரம்?....சரி, சரி, தங்களைத் தூங்கச் சொல்லிவிட்டு