பக்கம்:குமண வள்ளல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. வெளிமானும் இளவெளிமானும்

ப்போதும் ஒருவனையே அண்டி இரந்து பொருள் பெற்று வாழ்வது முறையாகுமா? உலகத்தில் வள்ளல் ஒருவன்தானா? எல்லோரும் குமணனைப் போலப் பெருவள்ளலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஓரளவு புலவர்களை ஆதரிக்கும் இயல்புடைய செல்வர்களும் குறுநில மன்னர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவர்களையும் பார்த்துப் பழக்கம் செய்துகொண்டால் என்ன? என்ற எண்ணம் ஒரு நாள் பெருஞ்சித்திரனாருக்கு உண்டாயிற்று.

‘நம்மிடம் இருப்பது தமிழ், அவர்களிடம் இருப்பது செல்வம். அதை நமக்குக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நம் செல்வம் என்றும் குறை படாது. யார் தமிழ் நயம் தெரிந்து பழகுகிறார்களோ, யார் உள்ளங்கலந்து நட்புப் பூணுகிறார்களோ அத்தகையவர் சிலரைத் தெரிந்துகொண்டு அவர்களையும் பார்த்துப் பரிசில் பெறுவதில் தவறு இல்லை’ என்று அவருடைய எண்ணம் படர்ந்தது. அது செயலாவதற்கு முன், பெருஞ்சித்திரனார் தம்மோடு பழகும் புலவர்களை விசாரித்தார். பறவைகளுக்குப் பழம் உள்ள மரங்கள் இன்ன இடத்தில் இருக்கின்றன என்று தெரியும்; புலவர்களுக்கும் புரவலர்கள் உள்ள இடம் தெரியும். அவர் அப்படி விசாரிக்கையில் வெளிமான் என்ற குறுநில மன்னனைப்பற்றித் தெரிந்துகொண்டார். அவன் குமணனைப் போன்ற செல்வனல்லாவிட்டாலும் புல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/58&oldid=1362583" இலிருந்து மீள்விக்கப்பட்டது