பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மலையில் சரிவின் வழியாகவே போகத் தொடங்கியது. இப்படியாக மரத்தில் ஏறியும், குன்றுகளில் தாவியும், அது நூலேணி சுருட்டி வைத்திருந்த இடத்தை அடைந்துவிட்டது. நூலேணியை அங்கு முளையடித்துக் கட்டி வைத்திருந்தார்கள். அதன் கீழ்ப்பாகம் சுருளாக இருந்தது. அதை அவிழ்த்து ஜின்கா கீழே விட்டது. மருதாசலத்திற்கு அதன் செய்கை ஒரே ஆச்சரியமாக இருந்தது.

“எல்லோரும் ஏணியின் வழியாக மேலே ஏறுங்கள். நான் கடைசியில் வருகிறேன்” என்று அவன் மகிழ்ச்சியோடு சொன்னான்.

“அண்ணா, நானெப்படி ஏறுவேன்?” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள்.

“நான் முதுகிலே சுமந்துகொண்டு போகிறேன். கவலைப்பட வேண்டாம்” என்று மருதாசலம் தெரிவித்தான். கண்ணகியை எப்படி மேலே கொண்டு சேர்ப்பது என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்த தங்கமணி, மகிழ்ச்சியோடு முதலில் நூலேணியில் ஏறிச் சென்றான். பிறகு, அவனைத் தொடர்ந்து சுந்தரம் ஏறினான். கடைசியாக, மருதாசலம் கண்ணகியைத் தூக்கிக்கொண்டு மேலே போய்ச் சேர்ந்தான்.

அவர்கள் ஏறிவந்த செங்குத்தான பகுதியிலே கொஞ்சம் இடைவெளி விட்டு வேறொரு செங்குத்தான பகுதி இருந்தது. அது மலையின் உயரத்தை இன்னும் அதிகப்படுத்திக் காண்பித்தது. அதன் ஒரு பகுதியிலே மரக் கூட்டங்களினிடையே இயற்கையாக அமைந்த ஒரு குகை இருந்தது. அதை நோக்கி மருதாசலம் வேகமாகச் சென்றான். குகையின் முன்பாகத்திலே செங்கல்லால் சிறிதளவு சுவர்கள் எழுப்பிக் குகைக்குக் கதவு அமைத்திருந்தார்கள். அந்தக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

‘அப்பா எங்கே போய்விட்டார்?’ என்று சந்தேகத்தோடு கேட்டுக்கொண்டே மரங்களையெல்லாம் கடந்து. வெறும் பாறையாக இருந்த இடத்திற்கு வந்து நின்றுகொண்டு, அவன் சுற்றிலும் பார்த்தான். அவனைப் பின்தொடர்ந்து வந்த தங்கமணி, “உங்களுடைய தகப்பனார் இங்கேதான் வசிக்கிறாரா?” என்று மருதாசலத்தைக் கேட்டான்.