பக்கம்:திருவாசகத்தேன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தனித்துணை

ந்தப் பிறப்பு, துன்ப நீக்கத்திற்காகவே துன்பத்தின் காரணமாய அறியாமை நீக்கத்திற்காகவே! ஆயினும் உடலுறு வாழ்க்கையில் உயிர் உறும் துன்பம் தாங் கொணாதது; உள்ளவாறு உணரின் தாங்கவே இயலாதது. இத்துயர் அனுபவத்தின் விளைவே.தாக்கமே திருவருட் சிந்தனை!

இறைவன்- சிவபெருமான் உயிருக்கு வாய்த்த தனித் துணை! 'தனி' என்ற அடைசொல் சிறப்புப் பற்றியது. உயிருக்கு ஈடும் எடுப்பும் இல்லாத துணையாதலின் 'தனித்துணை' என்றார். உயிர் சந்திக்கும் துணைகள் பலப்பல உண்டு. தாயினும் சிறந்த துணை ஏது? ஆயினும் தாய் காலத்தினால் பிரிக்கப்பட்டு விடுகிறாள். இடம், தொலைவு நட்புத் துணையினைப் பிரித்து விடு கிறது. நண்பரெனக் கொள்பவர்களில் பலர் கொடுத்தல் குறைபடும் பொழுது பிரிவர். ஆனால், இறைவன்- சிவன் பிரிவதில்லை. இறைவனுக்கும் உயிருக்குமுள்ள உறவு குறியெதிர்ப்பு இயலானது. தன்னலமற்றது. உயிரின் ஆக்கத்திற்காக இறைவன் தொடர்பு. கடவுள்- உயிர் இரண்டுமே காலங்கடந்தவை. ஆதலால், க்ாலத்தால் பிரிவு நிகழ வாய்ப்பு இல்லை. இறைவன் உயிர்க்குயிரதாக இருப்பதால் இடத்தால் பிரிவும் இல்லை. அதுமட்டுமல்ல.