பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எருதும் சிங்கமும்

27


'துட்டர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்வதும், மூடர்களிடம் இனிய மொழி பேசுவதும், ஊமைக்கு உபதேசம் செய்வதும் நட்டமே தவிர ஒரு நன்மையும் இல்லை.

‘அறிவில்லாதவனுக்கு நல்லறிவு புகட்டுவதும், தீய அற்பர்களிடத்தும் தன் இல்லாமை கூறி இரப்பதும், துன்பமும் நோயும் தரும் பெண்களைக் காப்பதும், கல்லின்மேல் எறிந்த கண்ணாடி வளையல் போல் பயனின்றிக் கெடும்.

‘உப்பு மண் நிலத்தில் பெய்த மழையும், செவிடர்களுக்குச் செய்த உபதேசமும், தீயவர்களுக்குப் படைத்த சோறும் ஒன்றுதான்.

‘சந்தனமரக் காட்டிலும், தாமரைக் குளத்திலும், தாழைச் செடியிலும் பாம்பும் முதலையும் முள்ளும் சேர்வதுபோல் அரசர்களைத் துட்டர்கள் போய்ச் சூழ்ந்து கொள்வார்கள்.

'ஆகவே நல்லறிவு படைத்தவர்கள், மன்னர்களிடம் போய்ச் சேர்ந்தால், அம்மன்னர்களை மனமாறுபாடடையச் செய்வதும், அவர்களைக் கொல்ல நினைப்பதும், சூதுகள் புரிவதும் துட்டர்களின் இயற்கை நீதியேயாகும்,’

இப்படியெல்லாம் நரி கூறியதும் அந்த மாடு துயரத்துடன், சிங்க மன்னனின் இனிய சொல்லும், ஆதரவான பேச்சும், அன்புப் பார்வையும் எல்லாம்