பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

செம்மொழிப் புதையல்



புழு :-ஆம். யான் கேட்பனவற்றில் உறுதிப் பொருளைக் காண்டல் கூடும் என்னும் நோக்கத்துடன் ஏற்றுக் கொள்வ லென்பதைப் பண்டு கூறியதே யன்றி, இன்றும் கூறுகின்றேன், இனி என்றும் கூறுவேன். உரைப்பார் உரைப்பனவற்றை யுரைத்த வாற்றா னுட்கொள்ளு மியல்பினை யுடையார்க்கு, அவர் உண்மை கலந்தவற்றைத் தாமே யுரைத்தல் வேண்டும். ஒரு வாற்றானு மியைபில்லாத வொன்றை யியைத்துக்கூறின் யாவர் தாம் ஏற்பர். நிலையாத வற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடையாதல் போல, இயைபில்லனவற்றை யியைபுடையவாக்கிக் கூறலும், கூறக்கேட்டலும் புல்லறிவாண்மை யாதலோடு கடையாதலும் தோன்றிற்றன்றே. நண்ப! சேடப்பூச்சிகளின் சினை பொரியின் கீடங்களாக மாறுமென்பதும், கீடங்களுந் தம் இயங்குதற் றன்மை நீங்கிப் பறத்தற்றன்மையினை யெய்து மென்பதும் முற்றிலும் பொருந்தாக் கூற்றுக்களே. இவற்றோரன்ன புன்மொழிகளை நீ யாண்டு, யாங்ஙனம், கேட்டற்குத் துணிந்தனை? இவை யொல்லுமோ வென்பதை நீயே ஆய்ந்து நோக்குக. அங்ஙனமாதல் ஒருகாலும் முடியாதன்றோ!

பருந்து:- இனி வேறு கூறல் எனக்கு இயலாது. வேண்டுமேல் யான் அறிந்தவற்றைக் கூறுவல்; கேள்: யான் வயல் வழியும், வானாறும் படர்ந்து கொட்புறும் பான்மையேன். அங்கனம், படருங்கால், இடையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காணாது செல்வது இல்லை. அவற்றுள் ஒவ்வொன்றும் நினைவுவல்லார் நெஞ்சும் கடந்து நிற்குந்தன்மைத்து. அவற்றைக் கண்ணுற்றுத் தெளிந்தயான் இவ்வாறு நிகழ்தலுங் கூடுமெனத் துணிந்தேன். ஒர் குறுகிய எல்லைக்கணியக்கமும், தான்வாழும் இலையன்றிப் பிறகண்டறியாமையுமுடைய நினக்குப் பிறவனைத்தும் அரியவும், இயைபில்லவும், முடியாதவுமாகவே தோன்றும், கிணற்றுத்தவளை புணரியியல்பை யறியுங்கொல்!