பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. போராட்டப் பெண்மை
1


1966 ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி, புதுடெல்லி பார்லிமென்ட் கட்டடத்துக்கு வெளியே மிக ஆவலுடனும் பரபரப்புடனும் ஒரு கூட்டம் குழுமியிருக்கிறது. இது கலகக்காரர்களின் கூட்டமோ வீணர்களின் கூட்டமோ அல்ல. இவர்கள் எல்லோருமே இந்தியத் துணைக் கண்டத்தின் பொறுப்பு வாய்ந்த குடிமக்கள் எனலாம். இவர்களில் சிலர் பிரசவ அறைக்கு வெளியே பொறுமையின் எல்லையில் நடை போடும் கணவன்களைப்போல் முகத்தை அடிக்கொருமுறை நிமிர்த்தி உள்ளே பார்க்கின்றனர்.

உள்ளிருந்து கதவு திறக்கப்பட்ட, ஆரவாரம் கேட்கிறது.

என்ன? என்ன?

ஆணா, பெண்ணா?

பெண்...!

ஒரே மலர்ச்சியாய் முகங்கள் ஒளிருகின்றன.

“ஜவஹர்லால் நேருவுக்கு... ஜே!” என்ற கோஷம் வானைப் பிளக்கிறது.

தூய வெண்ணிறக் கதர்ச் சேலையில் போர்த்திய சால்வையில் ஒரு சிவப்பு ரோஜா அணி செய்ய, முகம் மலர, கூப்பு கையுடன் அங்கு பிரசன்னமாகிறார் இந்திரா காந்தி.

உடனே, “இந்திரா காந்தி வாழ்க!” என்ற கோஷம் உயருகிறது. ஒரு புன்னகையுடன் மக்கள் அளித்திருக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், இந்திரா காந்தி.