பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

5


என்ற பாட்டைத்தான் எத்தனை முறை நாம் படித்திருக்கிறோம், பாடியிருக்கிறோம். பாடிப்பாடி மகிழ்ந்திருக்கிறோம். இந்தப் பாட்டு என் எண்ணத்தில் சுழலச் சுழல, இந்த ஆறுமுகமான பொருளை தமிழ்நாட்டுக் கலைஞர்கள் எப்படியெல்லாம் கல்லிலும் செம்பிலும் உருவாக்கியிருக்கிறார்கள் என்று காண என் உள்ளம் விழைந்தது. அந்த விழைவு காரணமாக நான் கண்ட ஆறுவடிவங்களே, ஆறுமுகமான பொருளை விளக்கும் வடிவங்களாக உங்கள் முன் வருகின்றன.

“அருணதள பாத பத்மம் அனுதினமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில் வீரனை” மயிலுடன் சேர்த்தும், பார்த்திருக்கின்றோம். மயில்மேல் ஆரோகணித்து வருவதையும் கண்டிருக்கிறோம். வந்தித்து வணங்கி இருக்கிறோம். ஏறுமயில் ஏறி விளையாடும் முருகனை நாம் எல்லாத் தலங்களிலும் காண முடிவதில்லை. மயில்மேல் ஆரோகணித்து வருவதோடு அதன் மேல் ஏறி விளையாடிக் கொண்டே வரும் கோலக்குமரனது வடிவம் ஒன்று மாயூரத்தை அடுத்த நனிபள்ளி என்னும் தலத்திலே செப்புச்சிலை வடிவத்திலே இருக்கிறது. சின்னஞ்சிறு விளையாட்டுப் பிள்ளையாக மயில்மேல் ஏறி விளையாடும் கோலம் சிறப்பாய் இருக்கிறது.

குருவாய் அரனுக்கு உபதேசம் செய்த குகனைக் காண நாம் அந்த ஞானபண்டிதன் இருக்கும் திரு ஏரகத்திற்கே விரைவோம். அங்கே மூலவனாக நிற்பவனோ கோவனாண்டியாக நிற்கிறான். செப்புச் சிலை வடிவிலும் அவன் அங்கு உருவாக வில்லை, ஏதோ முன் மண்டபத்து மாடியில் சுதை உருவில் மட்டுமே உருவாகியிருக்கிறான். அதுவும் இருபதாம் நூற்றாண்டுக் கலைஞர்கள் கைவரிசையே ஒழியப் பண்டைத் தமிழகத்துச் சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவானவன் அல்ல.

ஆனால், ஈசனுடன் ஞானமொழி பேசும் அந்த அழகு முகத்தைக் காண வேண்டுமென்றால் நாம் சென்னையை அடுத்த போரூருக்கே செல்ல வேண்டும். அங்கே கருவறையைச் சுற்றியுள்ள மேலப்பிரகாரத்திலே இரண்டடி உயரத்திலுள்ள செப்புச் சிலை வடிவில் அந்த ஞான பண்டிதன் காட்சி தருவான். அப்பனின் மடிமீது இருந்துக்கொண்டே அவனுக்கு பிரணவ உபதேசம் செய்யும் கோலம் அது.