பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

55


மனம் வருந்திய அவர்கள், ‘கண்ணா! தவறு செய்து விட்டோம்! எங்களுக்கு விமோசனம் உண்டா’ என்று இறைஞ்சினார்கள். ‘தல்ப்ய ருஷியிடம் போய்க் கேளுங்கள்!’ என்றானாம் கண்ணன். கதைக்குள் கதையாக, அவர் இன்னொரு கதையை விடையாகக் கூறினாராம்.

மானஸா ஏரியில் ஸுதாஸனின் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனராம். தற்செயலாக அங்கு நாரதர் வந்தாராம். பெண்கள் அவரை மரியாதையுடன் வணங்காமலே. ‘நாராயணனைக் கணவனாக அடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்களாம். நாரதர் மனதில் கோபம் கொண்டாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், ‘இளவேனில் மாதங்களின் பிற்பகுதியில் உயர் வருணத்தோனுக்குப் பொற்கட்டில் தானம் செய்தால் நாராயணன் கணவனாக வாய்ப்பான்’ என்று கூறினாராம். ஆனால் உள்ளுற ‘விலைமகளிராவீர்’ என்று சபித்தாராம்.

இந்த இரண்டு வரலாறுகளும் ஒரே கருத்தை அடிப்படை யாக்குகின்றன.

கணவன் என்று உரிமை கொண்டவனுக்கு அவள் ஒரு கருவி;பொம்மை. அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இவளுக்கு உயிரும் உணர்வுகளும் தனியாக இருக்கலாகாது. மீறிவிட்டால், அதிகபட்சமான தண்டனை, அவள் உடலே பொதுச் சொத்தாவது தான்.

இப்படிச் சபிக்கப்பட்ட ஒரு குலம் இந்திய மரபில், ஆணாதிக்க சமுதாயத்தில் நியாயப்படுத்தப்பட்டு மீள முடியாத தளைகளுக்குட்படுத்தப்பட்டது. ஆணாதிக்கத்துடன் போர் தொடுத்த தாய்ச் சமுதாயத்தினர், தாசிகளாக்கப்பட்டனர். பண்டைய தமிழ்ச் சமுதாயம் கண்டிருந்த விறலியர், பாணர் மரபினர் இப்படி ஒரு நாகரிகத்துக்குள் நெறிப்படுத்தப்பட்டனர்.