பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

151


விவரங்களையும், விளக்கமாக ஒரு பேருரை மூலமாக எடுத்துரைத்தார். அக்கூட்டத்திலே அதை நிரூபித்தும் காட்டினார் லூயி பாஸ்டியர்.

கூட்டத்தில் கூடியிருந்த எல்லாத் துறை அறிவாளர்களும், லூயி பாஸ்டியரின் விளக்க உரையைக் கேட்டும், அவர் நிரூபித்துக் காட்டிய சோதனைப் பொருட்களைப் பார்த்தும், அவரை வியந்து பாராட்டி மகிழ்ந்து கையொலிகள் எழுப்பினார்கள்.

❖ ‘ஏற்கனவே இல்லாமல், தாமாகவே நுண்ணுயிர்கள் தோன்றும்’ என்று மக்களாலும், விஞ்ஞானிகளாலும் நம்பப்பட்டு வந்த மூட நம்பிக்கைக் கருத்து - தகர்தெறியப்பட்டது. இதனால் ஃபிரான்சு அரசுக்கும், மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

❖ பாரீஸ் நகர், பீர், ஒயின் போன்ற மது பானங்கள் கலவை கெட்டு அழுகிப் போவதற்குக் காரணம், விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டியர் என்ற விஞ்ஞானிதான் என்ற பெயர் நிலை நாட்டப்பட்டது.

❖ பீர், ஒயின் போன்ற கெட்டுப்போன கலவைகளைக் கெடாமல் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய விஞ்ஞானப் புதுமைச் சாதனைகள் கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டன.

❖ பாரிஸ் நகரத்திலிருந்த பீர், ஒயின் தொழிற்சாலைகள் நட்டத்தில் நடப்பதைத் தடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு வேலைப் பெருக்கம் ஏற்பட்டு, அவர்களது வறுமை வாழ்க்கை ஒழிந்து வளமாக்கப்பட்டது.

❖ஒயின் தயாரிப்பதிலே உலகப் புகழ்பெற்றிருந்த ஃபிரான்ஸ் நாடு, இடையில் அதன் புகழ் மங்கியதைத் தடுக்கப்பட்டு, மீண்டும் பழைய புகழே ஃபிரான்சுக்கு ஏற்பட்டது!

❖ ஃபிரான்ஸ் ஆட்சியின் பொருளாதாரச் சீரழிவு, ஒயின், பீர் கலவை அழுகல்களால் ஏற்பட்டன அல்லவா? அந்தச் சீரழிவு தடுக்கப்பட்டு, ஃபிரான்ஸ் நாட்டுப் பொருளாதார வளர்ச்சி முன்பைவிட இப்போது பெருகி வளர்ந்தது.