பெருங்கதை/4 16 விரிசிகை போத்தரவு

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

4 16 விரிசிகை போத்தரவு

விரிசிகையின் தமர் அவளைக் கொணர்தல்[தொகு]

நெருங்கிய பல்சனம் விரும்புபு நோக்க
ஒள்ளிழை மாதரைப் பள்ளியு ணின்று
திருவமர் சிவிகையுட் சுமந்தனர் கொணர்ந்து
பெருநகர் நெடுமதிற் புறமருங் கியன்ற
தேவ குலத்தொரு காவினு ளிரீஇ 5

விரிசிகையைப் புனைதல்[தொகு]

வேரியுந் தகரமும் விரையு முரிஞ்சி
ஆர்கலி நறுநீர் மேவர வாட்டித்
துய்யறத் திரண்டு தூறலு மிலவாய்
நெய்தோய்த் தன்ன நிறத்த வாகிக்
கருமையிற் கவினிப் பருமையிற் றீர்ந்த 10
சில்லென் கூந்தலை மெல்லென வாரிக்
கானக் காழகிற் றேனெய் தோய்த்து
நறுந்தண் கொடிப்புகை யறிந்தளந் தூட்டி
வடித்து வனப்பிரீஇ முடித்ததன் பின்னர்த்
தளிரினும் போதினு மொளிபெறத் தொடுத்த 15
சேடுறு தாமஞ் சிறந்தோன் சூட்டிய
வாடுறு பிணையலொடு வகைபெற வளாஅய்க்
குளிர்கொள் சாதிச் சந்தனக் கொழுங்குறைப்
பளிதம் பெய்த பருப்பிற் றேய்வையின்
ஆகமு முலையுந் தோளு மணிபெறத் 20
தாரையுங் கொடியுந் தகைபெற வாங்கி
இருந்தா ளிளம்பனை விரிந்திடை விடாஅ
முளைநுகும் போலை முதலீர்க்கு விரித்துத்
தளையவி ழாம்பற் றாஅள் வாட்டி
நீல நெடுமயி ரெறியுங் கருவிக் 25
காலென வடிந்த காதணி பெறீஇச்
சில்லெ னரும்பு வல்லிதி னமைத்து
நச்சர வெயிற்றி னல்லோன் புனைந்த
நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்கக்
கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதற் கொளீஇ 30
உடைந்துவே யுகுத்த வொண்முத் தொருகாழ்
அடைந்துவில் லிமைப்ப வணிபெறப் பூட்டிக்
கல்லுண் கலிங்க நீக்கிக் காவலன்
இல்லின் மகளி ரேந்துவன ரீத்த
கோடி நுண்டுகில் கோல மாக 35
அவ்வரி யரவின் பையெனப் பரந்த
செல்வ வல்குற் றீட்டிவைத் ததுபோல்
வல்லிதின் வகைபெற வுடீஇப் பல்லோர்
காணச் சேற லாற்றா மகட்கு
நாணுத் தரீகந் தாங்கிக் கையுளோர் 40
நீணீர் நறுமலர் நெரித்துக் கொடுத்து
மலரினும் புகையினு மாத்தொழில் கழிப்பி

விரிசிகையை விடுத்தல்[தொகு]

உரையினு மோத்தினு முவப்பக் கூறிய
சாங்கிய மடமக டலையாச் சென்ற
காஞ்சுகி மாந்தர்க் கோம்படை கூறி 45
அடுத்த காதற் றாயர் தவ்வையர்
வடுத்தீர் தந்தை வத்தவர் கோவென
விடுத்தனர் மாதோ விரிசிகை தமரென்.

4 16 விரிசிகை போத்தரவு முற்றிற்று.