24.
வாழ்கின்றாய் வாழாத
நெஞ்சமே வல் வினைப் பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல்
காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச்
சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக்
கடல் ஆய வெள்ளத்தே
20
வாழாத நெஞ்சம்-வாழவேண்டிய முறைப்படி வாழாத நெஞ்சம். அவலக்கடல்-துன்பக்கடல்.
இப்பாடல், மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அடிகளார் தம் மனத்தை முன்னிலைப்படுத்திப் பேசி உள்ளதுபோல் தோன்றும். ஆழ்ந்து நோக்கினால், மனித சமுதாயம் முழுவதையும் முன்னிலைப்படுத்தி, மிகத் தேவையானதும் இன்றியமையாததுமான ஒரு கருத்தைச் சொல்ல விழைந்த அடிகளார், அதற்குப் பதிலாகத் தம் மனத்தை முன்னிலைப்படுத்திச் சொல்கிறார் என்பது தெளிவாகும்.
'மனமே நீ அவனிடம் ஆட்படுவாயேயானால், நீ வீழ்ச்சியடையாமல் காத்துக் கைதுக்கிவிட ஒருவன் இருக்கின்றான். அவனை மறந்ததால் இப்பிறப்பில் இவ் உலகிலும், மறுபிறப்பில் ஏனைய உலகிலும் அவலக்கடலில் வீழ்கின்றாய்’ என்பதே இப்பாடலின் பொருளாகும்
பின்வரும் பத்துப் பாடல்களுக்கும் சுட்டறுத்தல் என்று முன்னோர் தலைப்பிட்டுள்ளனர். பின்னர் வந்த
உரையாசிரியர்கள் இத்தொடருக்குப் பல்வேறு வகையாகப் பொருளுரைத்துள்ளனர். இவ்வாசிரியனுக்குத் தோன்றிய சிந்தனை வருமாறு: