உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிலும் மாடும்

27

கொல்லவாள் வீசல் குறித்தேன்; இப் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் 'கொல்லுதலே சூழ்ச்சியென
முன்போல் மறைந்துநின்றேன்; மோகப் பழங்கதையைப்
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு, குயிலாங்கே கூறுவதாம். “நந்தியே! 15
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!
காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே!
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ ?
மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை
மேனுயுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். 20
காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே!
நீள முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்
வானத்(து) இடிபோல 'மா'வென்(று) உறுமுவதும் 25
ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்பல்
காலம்நான் கண்டு கடுமோகம் எய்திவிட்டேன்;
பார வடிவும் பயிலும் உடல்வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத 30
சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான்பிறந்தேன்.
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு,
மூட மனிதர் முடைவயிற்றுக்(கு) ஓர் உணவாம்,
சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி 35
என்னபயன் பெற்றேன்? என்னைப் போலோர் பாவியுண்டோ ?
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில்
போற்றுமொளி, முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன் றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே 40
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை;
மூடமதியாலோ, முன்னைத் தவத்தாலோ;
ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்.