பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

21


ஆடுகள மையத்தில் வைக்கப் பெற்றிருக்கும் பந்தை தைப்பது தான் நிலை உதை.

ஆட்டம் முதலில் தொடங்கும் போது, ஒவ்வொரு முறை பந்து விதிகளுக்கேற்ப இலக்கினுள் சென்று அது வெற்றி எண்ணைத் தந்த பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கவும்; ஆட்டத்தின் முதல் காலப் பகுதி (Half) முடிந்து மறுகாலப் பகுதியில் ஆட்டத்தைத் தொடங்கும் போதும்; இக்கட்டான சூழ்நிலைகளில் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக ஆட்டம் தடைபெற்று நின்று மீண்டும் ஆட்டத்தைத் தொடங்குகின்ற நிலையிலும், 'நிலை உதை' எடுக்கப்படுகிறது.

நிலை உதையை எவ்வாறு எடுக்க வேண்டும் என்றும் அறிந்து கொள்வது மிகமிக முக்கியமாகும்.

வட்டத்தினுள்ளே நிற்கின்றவர்களில் ஒருவர், முதலில் பந்தை உதைத்துத் தள்ளுவார். அந்தப் பந்தானது குறைந்தது ஒரு கெஜ தூரமாவது ஒடி உருண்டிருக்க வேண்டும். அவரின் அருகில் இருக்கும் பாங்கர் (Team Mate) அந்தப் பந்தை உதைத்தாடிய பிறகுதான் மற்ற எதிர்க் குழுவினரோ அல்லது பிறரோ விளையாடலாம்.

பந்தை உதைத்து முதன் முதலில் ஆடிய முதல் ஆட்டக்காரரே, மீண்டும் ஒரு முறை பிறர் பந்தைத் தள்ளி ஆடும் முன் ஆடக் கூடாது. இதை மீறி, அவர் தானே இரண்டாவது முறையாகத் தள்ளி விளையாடினால், அவர் தவறிழைத்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த இடத்திலிருந்து 'தனி உதை'(Free-Kick) மூலம் ஆட்டத்தை மீண்டும் தொடங்கி வைப்பார் நடுவர். இவ்வாறு நிலை உதை ஆட்டத்தில் எடுக்கப்படுகிறது.