பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கால் பந்தாட்டம்


'ஏதாவது ஒன்றில் எண்ணம் இலயித்து விட்டால்' இருக்கின்ற எல்லாவற்றையுமே மனம் மறந்துவிடும். துறந்துவிடும்’ என்ற மொழிக்கேற்ப, "புட்பாலி” (Fut Balle) என்ற பெயர் கொண்ட இந்த ஆட்டத்தில் ஆர்வம் பெருக்கெடுத்தோடவே, அன்றாட வாழ்வுக்கு அவசியமான, நாட்டுக் காவலுக்கு நாயகமான விற்பயிற்சியை மறந்து ஒதுக்கத் தொடங்கினர் மக்கள். இந்த நிகழ்ச்சி நாடாண்ட மன்னர்களுக்குக் கோபத்தை ஊட்டவே, அதனால் தடை செய்யப்படும் நிலைமைக்கு வந்து நின்றது.

இரண்டாம் ஹென்றி அரசரிலிருந்து எட்வர்டு மன்னர் நாடாண்ட வரை எல்லோரும் கால் பந்தாட்டத்தை ஆடவே கூடாது என்று சட்டமே செய்துவிட்டனர். மீறி ஆடியவர்களுக்குத் தண்டனையாக சிறை வாசமும், அபராதமும் விதிக்கப் பெற்றன.

இவ்வாறு பதினோராம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை பரவியும், விரவியும், பதுங்கியும், ஒதுங்கியும் வாழ்ந்த இந்த ஆட்டம், இரண்டாம் சார்லஸ் என்னும் அரசரால் சிறப்புற ஆடுதற்காகச் செப்பனிடப்பட்டு, சீர்திருத்தி அமைக்கப் பெற்றது என்று வரலாற்றுக் குறிப்பு ஒன்று வளமாகக் கூறிச் செல்கிறது.

விதிகள் வந்த விதம்

உணர்ச்சி மிகுதியால் வெறும் உதைத்தாடும் ஆட்டமாகவே இருந்து வந்த ஆட்டத்திற்கு, கேம்பிரிட்ஜ் கலாசாலை நிர்வாகிகளால் 1846ஆம் ஆண்டு, விதிமுறைகள் வகுக்கப்பட்டன. களை நீங்கிய பயிர் தழைத்து வளர்வதுபோல, கரைகள் பெற்று ஆற்று நீர்