நீங்களும் இளமையாக வாழலாம்
75
முதுமையில் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர்கள், தங்கள் வாழ்வில் தொடர்ந்து ஆர்வம் உள்ளவர்களாகவே வளர்ந்திருக்கின்றார்கள்.
இப்படிப்பட்டவர்கள், இளைஞர்கள் தங்களுக்குப் போட்டியாக வருகின்றார்கள் என்று எண்ணவே மாட்டார்கள். இளைய உலகிலே தங்களுக்கு இடமில்லையே என்று இடர்ப்படவும் மாட்டார்கள்.
நமக்கென்று ஒரு வாய்ப்பில்லையே என்று நலிந்து போகவும் மாட்டார்கள்.
முதிய மனம் வந்தால்...
மனோ நிலையில் யார் தாழ்ந்து போகின்றார்களோ, முடங்கிப் போகின்றார்களோ, அவர்களே முதுமையை அதிகமாக எண்ணி முதுமையை தங்களுக்கு அதிகமாக்கிக் கொண்டு முனுமுனுத்து வாழ்கின்றார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் இளைஞர்களுடன் போட்டிபோட்டு இடம் பிடிப்பதற்கு முன்னதாகவே, வார்த்தையாலே, தாங்களாகவே தங்களுக்குள் வாதமிட்டுக்கொண்டு, சோர்ந்து உட்கார்ந்து விடுகின்றனர்.
அறிவார்ந்த முதியவர்கள் ஏன் முன்னுக்கு வர இயலாது முடங்கிப் போகின்றார்கள்.
இந்த மாதிரி முதிய மனிதர்களுக்கு அதிகமாக இருப்பது திருப்தியின்மை. அதிருப்தியே அவர்கள் அழிவுக்கு முதல் காரணம்.
மற்றவர்களிடம் ஒரு இனம் புரியாத எரிச்சல், சகிப்புத்தன்மை இல்லாமை; பொறுமையின்மை, மற்றவர்கள் மேல் எரிந்து விழுதல், முன்கோபங்கள், தங்கள் மேலேயே உள்ள சுயநலங்கள், அதற்கான எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், இந்த அற்ப குணங்களால் அவர்கள் சிதறுண்டு போகின்றார்கள்.