பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இது ஒரு பாபிலோனியக் கதை

தியாமட் என்ற சமுத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு, அவளுடைய குழந்தைகள் மேல் மகா கோபம் ஏனென்றால், அந்தக் குழந்தைகள் சதா சத்தமிட்டுக் கொண்டிருந்தன. தொந்தரவு தந்து கொண்டிருந்தன. அதனால், சமுத்திரத்தாய், தன் குழந்தைகளை அழித்து விடவேண்டுமென்று ஆத்திரத்துடன் முடிவு செய்தாள்.

தங்களுடைய தாயின் சதித்திட்டத்தைத் தெரிந்து கொண்ட குழந்தைகள், தாயை எதிர்த்தன. தாக்கின. ஆனாலும், தாயின் கோபம் முன்னே அவர்களால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. அவர்கள் தோற்றுப் பின்னோடினார்கள்.

குழந்தைகளின் கடைசியானவன் மார்டக் (Marduk) என்பவன் அவன் எப்படியும் தன் தாயை வென்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். கடவுளர்களை வேண்டிக் கொண்டு, தன்னுடைய இலட்சியம் வெற்றி பெறத் துணை கோரினான்.

கடவுளர்களும் கருணையுடன் செவிமடுத்து, உதவினர் புதிய சக்திகள் அவனுக்கு மாயமாக வந்துசேர்ந்தன. இறுதியாக, எல்லை இல்லா ஆற்றல் உடைய சமுத்திரத்தாயை வென்று வீழ்த்தினான் மகனாகிய மார்டக்.

தன் தாயின் உடலை, மீனை இரண்டாகக் கிழிப்பது போல, கிழித்தான். மேலும் கீழுமாக எறிந்தான். மேலே எறிந்த பகுதி வானமாயிற்று. கீழே விழுந்த பகுதி பூமியாயிற்று.

பூமியிலே இரண்டு ஆறுகள் - அவள் கண்களிலிருந்து ஆறாகப் பெருகி ஓடின. அவற்றிற்கு டைக்ரிஸ், எபரேடஸ் என்று பெயர்.