2
மறுக்கு மீசை வேதாசலம் வந்தான். அவன் இடது கையிலே 'ப்ளாக்' டயல் 'ஸீக்கோ' பளபளத்தது. 'V' போட்ட தங்க மோதிரம். ஸில்க் ஜிப்பா.
ஸிகரெட் புகையை விழுங்கி மூக்காலும் வாயாலும் தேக்கமாக வெளியேற்றினான்.
சாமியாரை நெருங்கி வந்து "என்ன சாமி! சௌக்கியமா? சிகரெட் ஊதறீங்களா?" என்று பரிவோடு, குழைந்த குரலில் கேட்டான். வேதாசலம் வலிய வந்து பேசுவது சாமியாருக்கு வியப்பாயிருந்தது. ‘என்னமோ இருக்கு விசயம்!’
“என்ன பிராண்டு?”
"வில்ஸ்தான்; ஏன் 555 தான். குடிப்பீங்களா?”
"இல்லே, சார்மினார் தான் பளக்கம்..."
"மணி என்ன ஆகுது சாமி?"
"கையிலே வாச் கட்டிக்கிட்டு என்னை டைம் கேக்கறீங்களே! ஏளு மணி ஷோ ஆரம்பிக்கிற நேரமாச்சு. ரிக்கார்டு போடறாங்களே...”
"இன்னா படமாம்?"
“சில நேரங்களில் சில மனிதர்கள்."
“நீங்க பாத்துட்டீங்களா?"
“நான் தான் நிஜ வாழ்க்கையிலேயே பல பேரைப் பார்த்துக்கிட்டிருக்கேனே! இதை சினிமாவிலே வேறே பாக்கணுமா? பதினாறு வயதினிலே வந்தா பாக்கலாம்னு ஒரு ஆசை"