22
என் கணவன் அவ்வளவு பொல்லாதவர் என்று கூற முடியாது. நான் வேண்டும் என்றுதான் துடிக்கிறார். ஆனால் எனக்குத்தான் அவரைப் பிடிப்பது இல்லை. இந்த மாதிரி அனுபவம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டு இருக்காது. ஏற்படவும் கூடாது.
அவருக்கு நான் முழுக்க முழுக்க மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பின் வேறு எப்படி நான் இருக்கமுடியும். அதாவது நான் இந்தச் சமூகத்தில் யாருடனும் பழகக்கூடாது; சிரிக்கக்கூடாது; பேசக்கூடாது என்பதுதான் அவர் நோக்கம். ஒரு நிமிஷம் என்னைவிட்டு அவருக்குப் பிரிய மனமே வராது.
ஆஷா அதுபோலத்தான் தன் கணவனிடம் நடந்து கொள்கிறாள். என்னால் அவரை க்ஷ க்ஷணம்கூட விட்டுப் பிரிந்து இருக்க முடியாது என்கிறாள்.
"இதோ பாரு நான் வெட்கம் விட்டுச் சொல்லுகிறேன்." என்னமோ சொல்லுவாள். என் பேனா அதை எழுத மறுக்கிறது. சிலவற்றை வாய்விட்டுச் சொல்லிவிடுகிறார்கள். அதை எப்படி எழுத்தில் எழுத முடியும். எழுதக்கூடாது.
சிலருடைய வாழ்க்கையிலே பயங்கரமான ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை அவர்கள் எப்படிப் பேச முடியும். அவளுக்குக் கல்யாணம் சீக்கிரமாக ஆகவில்லை.அது அவள் மீது குற்றமில்லை. யாரும் அவளைக் கண்டு ஆசைப்படவில்லை. அவ்வளவுதான். ‘ஆஷா’ என்ற பெயருக்கும் அவளுக்கும் ரொம்பதுாரம் இருந்தது.
ஏன் ஆசைப்படவில்ல. என்னைக் கேட்கிறார்கள். நான் எப்படிச் சொல்லமுடியும். அவளே சொல்லுகிறாள். நான் குள்ளமாக இருக்கிறேன். யார் வந்து பெண்ணைப் பார்த்தாலும் முதலிலே என் உயரம்தான் அவர்கள் கண்களில் படுகிறது.