"பாட்டி?" என்று சீதா கேட்டாள்.
அப்படிக் கேட்டபோதே, பாட்டி தங்களை விட்டுப் போய்விட்டாள் என அவள் அறிந்தாள். தாத்தாவின் வெறித்த பார்வை அவளுக்கு அதைப் புலப்படுத்தியது. அவள் அழ விரும்பினாள்-மேலும் துன்பம் அனுபவிக்க வேண்டாத பாட்டிக்காக அல்ல; மிக உதவியற்று, குழப்பமுற்றுக் காணப்பட்ட தாத்தாவுக்காக, ஆனால் அவள் தன் கண்ணிரை அடக்கிக் கொண்டாள். அவரது நரம்புகளோடிய, நடுங்கும் கரங்களைப் பற்றி, நெருக்கடியான தெருவில் அவரை நடத்திச் சென்றாள். வரவிருக்கும் காலத்தில் அவர் அவளையே நம்பி வாழ்வார் என்பதை அவள் அப்போதே உணர்ந்தாள்.
சில தினங்களுக்குப் பிறகு அவர்கள் தீவுக்குத் திரும்பினார்கள். ஆற்றில் வெள்ளம் இல்லை. மேலும் மழை பெய்தது. ஆனால் அபாய நிலை நீங்கிவிட்டது. தாத்தாவிடம் இரண்டு வெள்ளாடுகள் எஞ்சியிருந்தன. ஒரு ஆட்டை விற்றதே செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது.
தீவிலிருந்து அரசமரம் போய்விட்டதைக் கண்டதும், அவருக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை-தீவின் கற்பாறைகளைப் போல் நிலையானதாய் தோன்றிய மரம் அது; ஆற்றைப் போலவே அதுவும் அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. சீதா தப்பிப்பிழைத்ததை எண்ணி அவர் அதிசயித்தார்.
"அந்த மரம் தான் உன்னைக் காப்பாற்றியது" என்று அவர் சொன்னார்.
"அந்தப் பையனும்" என்றாள் சீதா.
அந்தப் பையனை நினைத்தாள் அவள். அவள் திரும்பவும் அவனை பார்க்க முடியுமா என எண்ணினாள். ஆனாலும் அவள் அடிக்கடி அவனை நினைக்கவில்லை. அவள் செய்தாக வேண்டிய வேலைகள் மிக அதிகமிருந்தன.
கோணிப்பைகளைக் கொண்டு அமைத்த ஒழுங்கற்ற ஒரு தடுப்பின் கீழேதான் அவர்கள் மூன்று இரவுகள் தூங்கினார்கள். பகலில் குடிசையைப் புதுப்பிக்க அவள் தாத்தாவுக்கு உதவினாள்.
அவள் கவனத்துடன் நிரப்பிய பெட்டி நீரால் இழுத்துச் செல்லப் படவில்லை. ஆனால் தண்ணிர் அதனுள் புகுந்திருந்தது. உணவும், துணி களும் கெட்டுப் போயின. எனினும் தாத்தாவின் ஹல்க்கா சேதமுற வில்லை. மாலை வேளைகளில், வேலை முடிந்த பிறகு, சீதா தயாரித்த சிற்றுண்டியை உண்ட பின், அவர் பழைய திருப்தியோடு புகை பிடிப்பார்.
சீதா, அரச மரம் நின்ற அதே இடத்தில், ஒரு மாங்கொட்டையை விதைத்தாள். அது முளைத்துப் பெரிய மரமாக வளர அநேக வருடங்கள்
45