1. இலக்கியத்தின் பண்பும் பாகுபாடும்
உலகம் தோன்றிப் பன்னெடுங்காலம் கழிந்துவிட்டது. மனிதன் தன் உள்ளத்து உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றவர்க்கு அறிவுறுத்த மொழியைப் படைத்துக் கொண்டான். இதனால்தான் மொழி நூலார் ‘மக்கள் மனத்தின் பிரதிபலிப்பே மொழி’[1] என்று கூறுவர். எனவே மக்களிலரேல் மொழி இல்லை என்பது பெறப்படுகிறது. மொழியை வளப்படுத்திக்கொண்ட மனிதன் இலக்கியம் சமைக்கத் தொடங்கினான்.
நம் தமிழ் மொழியோ, மிகவும் தொன்மையான பண்பட்ட மொழி. வாழ்வும் வரலாறும் உடைய மொழி. இம்மொழி பேசும் தமிழ்க்குடி, ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று பழகுதமிழ்ப் புலவரொருவரால் பாராட்டப்பெற்று பெருமை வாய்ந்தது. இருபது முப்பது நூற்றாண்டுகளாக ஓர் ஒழுங்கான வரையறைக்குட்பட்ட வளர்ச்சியினை மொழி பெற்றுள்ளது. மொழி, வாழ்வும் வளமும் பெற்ற நிலையில் மனிதன் சித்தனையினின்றும், முகிழ்த்ததே இலக்கியமாகும்.[2] மனிதசிந்தனையின் வடிவமாக — எல்லையாக — அளவுகோலாக — நின்றிலங்குவது இலக்கியமே.
வாழ்க்கையினின்றும் கருக்கொள்வதே — முகிழ்ப்பதே, இலக்கியம் எனலாம். வாழ்க்கையிலே மனிதன், தான் கண்டவற்றையும் உணர்ந்தவற்றையும் தான் அப்-