1955-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16-ஆம் நாள் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது. அன்று எனது தம்பி சுப்பிரமணியனுக்கு ஆபத்து ஒன்று ஏற்பட்டது. எனது விட்டின் பக்கத்திலேயே முனிசிபல் லாரி ஒன்றினால் மோதப்பட்டான். அவனது வலது கையின் மத்திய பாகம் நசுக்கப்பட்டது. கை இரண்டு துண்டாகவே ஆயிற்று. பின்புறம் மாத்திரம் தோலினால் ஒட்டிக்கொண்டிருந்தது.
அன்று நான் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த பெண்களும் அறியார்கள். எனது நண்பர்களில் சிலர் செய்தி தெரிந்தார்கள். அரசாங்க மருத்துவக் கூடத்திற்கு அவனை எடுத்துச் சென்றார்கள். எனக்கும் அவர்கள் செய்தி அறிவித்தனர். நானும் மருத்துவக்கூடம் வந்தேன். மருத்துவர்கள் எனது தம்பியின் உயிருக்கே மன்றாடினர். தவிர அறுபட்ட கையைத் துண்டிக்காது ஒட்ட வைப்பதற்கே முயன்றனர். மூன்று மாதங்கள் எனது தம்பி மருத்துவக் கூடத்தில் இருந்தான். அங்குள்ளார் அனைவரும் காட்டிய அன்பு என்றும் மறக்கற்பாற்றன்று. அவர்கள் யாவர்க்கும் எனது மனம் உவந்த நன்றி உரித்தாகின்றது.
எனது தந்தையார் எங்களைப் பார்க்க வந்தார்கள். ஒவ்வொரு சனி, ஞாயிறும் வந்தார்கள். நானும் எனது தந்தையாரும் மருத்துவக் கூடத்திலேயே நாட்களைத் தள்ளினோம். அவர்கள் சாரணர் இயக்கத்தில் இருபது