38 ◇ ராசீ
அதன் வாலைப் பிடித்துக்கொண்டு தலைகள் ஐந்திலும் காலை மாறிமாறி வைத்து நர்த்தனம் செய்தான்; அதைப் பார்த்து மகிழ்வதா? அவன் உயிர் தப்புவானா என்று கவலை கொள்வதா? என்று தெரியாமல் தவித்தனர்.
பாம்பு அடங்குவதாக இல்லை. அதனால், அவன் தன் கால்களால் மாறிமாறித் தாக்க அது வலி தாளாமல் தளர்ந்தது. அதன் சோக மூச்சைக் கேட்டு அதன் பத்தினிகள் வெளியே வந்து தலைகாட்டினர்.
இனித் தம் கணவன் உயிர் பிழைத்தல் அரிது என்று தெரிந்தது. உடனே நாகபத்தினிகள் கணவனின் உயிர்ப் பிச்சை கேட்டனர்; கண்ணனின் பெருமையை உணர்ந்து பலவாறு ஏத்திப் புகழ்ந்தனர்; தம்முடைய வணக்கத்தைத் தெரிவித்தனர். நாகமும் மிகவும் சோர்ந்து தன்னை விட்டுவிட வேண்டியது; தன் மூர்க்கத்தனத்தைத் தன் பிறவிக்குணம் என்றும், அதனை எளிதில் விட முடியாததால் தான் எதிர்த்தது என்றும் கூறியது.
பிருந்தாவனத்து மாடுகளும், ஆடுகளும், கோபியரும் அங்கு வந்து நீர் குடிக்க வேண்டும் என்றும், மக்கள் மிகுந்து வாழும் இடத்தில் தங்குவது தகாது என்றும், ஊருக்குப் பயன்படும் பொது நீர்த்துறையைப் பாழ்படுத்தக் கூடாது என்றும் அறிவித்தான்.
"காட்டில் வாழும் சிங்கம் புலி அவை இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கும் காப்பு; மற்றவர்களுக்கும் காப்பு; அதுபோல நீ கடலில் இருப்பதுதான் உனக்கும் நன்மை. மற்றவர்களுக்கும் நன்மை" என்று கூறினான்.
"மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு உடனே புறப்படு; என் ஊர் மக்கள் இங்கு வந்து புழங்க வேண்டும்" என்று கூறினான்.