சி.பா. 11
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத்துணைமுரு காவெனு
நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணையவர் பன்னிரு
தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடி வேலுஞ்செங்
கோடன் மயூரமுமே.
-கந்தரலங்காரம் : 70 இதுகாறும் கூறியவற்றால், பண்டுதொட்டு இன்று வரை நம் தமிழ் மக்கள் வணங்கிவரும் முருகப் பெருமான் முன்னியது முடித்து வைக்கும் திறனுடையவன் என்பதும், அவரை நினைந்து நிற்பவர் நாளாலும், கோளாலும், வினையாலும் நவைபட்டு நிற்க மாட்டார் என்பதும், வள்ளியின் தேனுாறு கிளவிக்கு வாயூறி நின்ற கலியுக வரதனாம், கார்த்திகேயனாகிய முருகப்பெருமான் முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் பெருமனங் கொண்ட பெருந்தகை என்பதும், அவர் தாளும், திருப்பெயரும், தோளும், வடிவேலும், மயிலும் விழிக்கும், மொழிக்கும், பழிக்கும், தனி வழிக்கும் முறையே துணையாக அமைவன என்பதும் பெறப்படும். எனவே தீராத வினை தீர்த்தருளும் மாலோன் மருகனை, வள்ளி மணாளனை, புள்ளி மயில் வேலனை நாள் தோறும் வணங்கி நற்பேறு பெற்று உய்வோமாக.