பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டனுள் தேவர்க்குரித்தாம் பகுதியெல்லாம் தொக்கு ஒருங்குவரும் என்று கூறுவர் ஆசிரியர்' என நச்சினார்க்கினியர் தாம் வேண்டுஞ்சொற்களை வருவித்து இச்சூத்திரத்திற்குப் பொருள்வரைந்துள்ளார். “அமரர்கண் முடியும் அறுவகை’’ எனவே பிறப்பு முறையாற் சிறந்த அமரர் வேறு, சிறப்புவகையால் அமரர் சாதியுட் சேர்த்து உரைக்கப்படும் அறுவகையாகிய முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்பன வேறு எனக் கொண்டார் நச்சினார்க்கினியர்.

இச்சூத்திரத்தில் 'அமரர்கண முடியும் அறுவகை யானும்’ எனத்தொகை சுட்டிய தொல்காப்பியனார், தாம்கருதிய அறுவகை யாவன இவையென விளங்க இச்சூத்திரத்தின் முன்னோ பின்னோ எவ்வாறு சுட்டியுள்ளார் என்பதனை இளம்பூரணரும், நச்சினார்கினியரும் தம் உரையில் எவ்விடத்தும் எடுத்துக்காட்டவில்லை. 'அமரர்கண் முடியும் அறுவகை” என்ற தொகைக்குத் தொல்காப்பியனார் கருத்தின் வழிவகை சுட்டாமல் உரையாசிரியர் இருவரும் தாம் கருதிய ஆறுவகைகள் இவையெனக் குறித்தனர். இவ்விருவர் உரையிலும் குறிக்கப்பட்ட அறுவகைகள் தம்முள் முரண்பட்டுள்ளமை யொன்றே அன்னோர் சுட்டிய அவ்வகைகள் தொல்காப்பியனார் கருதிய அறுவகை அல்ல என்பதனை நன்கு புலப்படுத்துவதாகும்.

இனி, நாவலர் பாரதியார் அமரர்கண் முடியும் அறுவகையானும்’ எனவரும் தொல்காப்பியத் தொடர்க்கு, "போர்மறவர் (அஃதாவது பொருநர்) பாற்சென்று அமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியீறான புறத்திணைவகை ஆறினும்’ எனத்தொல்காப்பிய மூலத்தை யொட்டி இடத்திற்கியையத் தெளிவான உரை வரைந்துள்ளார்.

‘அமரகத்து அஞ்சாது போர் புரியும் தறுகண் மறவர்களின் தொழிலாய்ப் பொருந்தும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் ஒழுகலாறுகளைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறும் அறுவகைத் திணைப்பகுதிகளும், குற்றமற்ற அகத் திணையொழுகலாற்றைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறும் காமப்பகுதியும் ஆகிய இவ்வேழு வகைகளும் பாடாண் திணையின்

19

22