பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடியவில்லை. நம்மைப்போலவே வளர்ந்து வாழ்க்கையின் இன்பதுன்பங்களை யெல்லாம் அனுபவித்தவர்களாகவே நிலவினார்கள்!” என்றும் நினைவுச்சரம் தொடுத்துப் பூமாலையை விரிக்கிறார்.

கதம்ப மணம் அற்புதம்!


அத்தங்காள்-அம்மங்காள்

பூவின் நினைவில் பூவை தோன்றுவா ளல்லவா?

பம்பாய்ப் பெருநகரின் ஒரு பகுதியான தாதரிலே, அடையாளங் கண்டுபிடிக்கமுடியாத சின்னஞ்சிறு வீடொன்றில் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க வகையில் சீதா பிறந்து வளர்ந்து, தன் ஆருயிர்த்தோழி லலிதாவுக்கு ராஜம்பேட்டைக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதவும் பழகியிருந்தாள். அத்துடன் எதிர்காலம் பசுமைக்கு ஒளியூட்டும் என்று தோன்றிய பாவனைகளில் கனவுகளைக் காணவும் பழகிக் கொண்டிருந்திருக்கவேண்டும்.

சீதாவின் தாய் ராஜம். அவள் தமையன் கிட்டாவய்யர். அவரிடம், “அண்ணா, இருபது வருஷமாய் உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேன்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அந்தப் பகுதியிலேயே வரன்பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்!” என்று இறைஞ்சுகிறாள்.

பம்பாயை ராஜம்பேட்டை கை தட்டி, கை ஏந்தி அழைக்கிறது.

18