13
இ-ள்: இனையனாகிய அக்கடவுள், ஒருவன் ஒருத்தி ஒன்றென்று சுட்டப்பட்ட உலகங்களெல்லாவற்றினையும் படைத்து நிறுத்தி இச்சா ஞானக் கிரியைகள் உணராத வண்ணம் ஆன்மாக்கள் எல்லாம் மூலமலத்துடனே அடங்கியிருக்கும்படி அழித்தலைச் செய்யுந்தான் எஞ்ஞான்று நீங்காததோர் புகலிடமாயிருக்கும் என்க.
ஆசுடன் அடங்க என்றதனால், புனருற்பத்தி யுண்டென்பது கூறியவாறாயிற்று. 'உயிரவை யொடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பாலென்னிற் - செயிருறு மலத்தினாகும்' (சித்தியார் 52) என்றருளிச் செய்தவாறு காண்க,
இதனால் அவனொருவனே முத்தொழிற்கும் உரியவன் என்பது கூறப்பட்டது.
விளக்கம்: உலகைப் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிற்கும் உரியவன், மகா சங்காரகாலமாகிய ஊழி முடிவில் உலகங்களெல்லாவற்றையும் தன்கண் ஒடுக்க வல்ல இறைவன் ஒருவனே என்பது உணர்த்துகின்றது.
எவையும் ஆக்கி அளித்து அடங்கப் போக்குமவன் போகாப் புகல் ஆம் என்க. எவையும்- அவன் அவள் அது எனப் பகுத்துரைக்கப்படும் உயிர்த்தொகுதிகள் எல்லாவற்றையும். ஆக்குதல் - உயிர்கட்கு ஆணவமலம் நீங்குகைப் பொருட்டாக உடல், கருவி, உலகு, நுகர்பொருள்களைப் படைத்தல். அளித்தல் உயிர்கட்குக் கன்மமலம் நீங்குதற் பொருட்டாக வினைப் பயனாகிய போகங்களை நுகரும்படி உயிர்களை உடம்புடன் நிறுத்திக் காத்தல். போக்குதல் - கன்மத்தினால் அலைப்புண்ணும் உயிர்களை இளைப்பாற்றுதற்பொருட்டு