பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2


பொறிகளை அடக்கி நெறிப்பட வாழ்பவர் இறையருள் பெற்று நிறைநாள் வாழ்வர்.

இறைவனுக்கு உவமை இந் நிலஉலகில் யாரையும் கூற இயலாது. தனக்கு உவமை இல்லாதவன்; அவன் தாளை, வணங்கு; உன் மனக்கவலைகள் மாய்ந்து மகிழ்வு பெறுவாய்; அறத்தின் கடல்; அருள்வடிவினன்; அவன் தாள் சேர்பவர் பிறப்பு அறுப்பர்; வீடுபேறு பெறுவர்.

மதிக்கத் தக்க பண்புகள் மிக்கவன் படைத்தோன். அவன் திருவடிகளை வணங்காத தலை பயனற்றது. தலைமை அதனை விட்டு நீங்கிவிடும்; உணர்வு அற்ற பிண்டமாக மதிக்கப்படும்.

பிறப்பு நீந்த முடியாத பெரிய கடல் என்றால், அதனைக் கடக்கும் தெப்பம் இறைவன் திருவடிகள்: பற்றுக அவன் தாள்களை. அவன் தாள்களைப் பற்றியவரே பிறவிக் கடலைக் கடப்பர்.

2. வான் சிறப்பு

வானத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டது மழை; அதனால் அதனை அமுதம் என்று அழைப்பர்.

உண்பவர்க்கு உணவு படைத்துத் தருவது மழை; பருகுவதற்குப் பயன்படுவதும் மழையே, மனித உயிர் வாழ்வுக்குத் தனித்து உதவுவது மழையேயாகும்.

வான்மழை பொய்த்துவிட்டால் இந்த உலகுதான் எப்படி வாழ முடியும்? பசி இதனை வாட்டுவது உறுதி.