திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 26 முதல் 27 வரை

விக்கிமூலம் இலிருந்து
பலிபீடம் (விப 27:1-8). ஹோல்மன் விவிலிய வரைவு ஓவியம். காலம்: 1890.


விடுதலைப் பயணம் (The Book of Exodus)[தொகு]

அதிகாரங்கள் 26 முதல் 27 வரை

அதிகாரம் 26[தொகு]

சந்திப்புக் கூடாரம்[தொகு]

(விப 36:8-38)


1 மேலும் திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய்.
அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும்,
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும்.
அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
2 மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம்.
ஒரு மூடு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்குமாம்.
3 இவற்றுள் ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும்
ஏனைய ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும் இணைத்து விட வேண்டும்.
4 பின்னர், முதல் தொகுப்பின் கடை ஓரத்தில்
நீல வண்ணத்துணி வளையங்களை அமைப்பாய்;
அவ்வாறே அடுத்த தொகுப்பின் கடை ஓரத்திலும் வளையங்களை அமைப்பாய்.
5 முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது.
மற்றத் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது.
வளையங்கள் எதிரெதிரே இருக்க வேண்டும்.
6 பொன்னால் கொக்கிகள் ஐம்பது செய்து,
அக்கொக்கிகளால் திரைத்தொகுப்புகளை ஒன்றாய் இணைத்துவிடு.
இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமையும்.


7 திருஉறைவிடத்தின் மேலே கூடாரம் அமைப்பதற்கு
வெள்ளாட்டு உரோமத்தால் மூடுதிரைகள் செய்வாய்.
பதினொரு மூடுதிரைகள் செய்யப்பட வேண்டும்.
8 ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழம். அகலம் நான்கு முழம்.
பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றே.
9 இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும்
ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்துவிடு.
ஆறு மூடுதிரைகளின் தொகுப்பு கூடாரத்தின் முன்பகுதியில்
இரண்டாக மடிக்கப்பட்டுக் கிடக்கட்டும்.
10 முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைப்பாய்.
அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த திரைத்தொகுப்பின் ஓரத்திலும் அமைப்பாய்.


11 வெண்கலத்தால் ஐம்பது கொக்கிகள் செய்து,
கொக்கிகளைக் காதுகளில் மாட்டிவிடு.
இவ்வாறு ஒன்றிணைந்து கூடார மூடுதிரை அமையும்.
12 கூடார மூடுதிரையில் எஞ்சியிருக்கும் பாகம் தொங்கிக்கொண்டிருக்கும்.
திருஉறைவிடத்தின் பின்புறத்தே பாதித் திரை தொங்கும்.
13 கூடார மூடுதிரையின் பக்கங்களில் மீந்திருக்கும்பகுதி,
திருஉறைவிடத்தின் ஒருபுறம் ஒரு முழமும்,
மறுபுறம் ஒரு முழமும் தொங்கி மறைக்கும்.
14 செந்நிறப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும்,
வெள்ளாட்டுத் தோல்களாலும் கூடாரத்திற்கு ஒரு மேல்விரிப்பு செய்வாய்.


15 திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்களைச்
சித்திம் மரத்தால் செய்வாய்.
16 ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழம்.
சட்டம் ஒவ்வொன்றின் அகலம் ஒன்றரை முழம்.
17 சட்டம் ஒன்றுக்கு இரு கொளுத்துகள் வீதம்
சட்டத்தோடு சட்டத்தை இணைத்து விடு.
அவ்வாறே திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களும் இணைக்கப்பட வேண்டும்.
18 திருஉறைவிடத்திற்காகச் சட்டங்கள் செய்யுங்கள்;
தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி நிற்க வேண்டியவை இருபது சட்டங்கள்.
19 ஒரு சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருத்துகள்,
அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருள்கள் என்று
இருபது சட்டங்களுக்குக் கீழே நாற்பது வெள்ளிப் பொருத்துகள் வேண்டும்.
20 திரு உறைவிடத்தின் இரண்டாவது பக்கமாகிய வடதிசையில்
இருபது சட்டங்கள் நிற்கும்.
21 ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு, மறுசட்டத்துக்குக் கீழே இரண்டு என்று
அவற்றில் நாற்பது வெள்ளிபாதப் பொருத்துகள் இடம் பெறும்.
22 திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்குப்பக்கத்திற்கான
ஆறு சட்டங்கள் செய்வாய்.
23 அதனுடன் திருஉறைவிடத்தின் மூலைகளுக்காக
இரண்டு சட்டங்களும் செய்வாய்.
24 அவை ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும்
இரட்டைக் கனமாக அமைக்கப்படும்.
இவ்வாறே இரண்டு மூலைகளும் அமையும்.
25 ஒரு சட்டத்தின் அடியில் இரு பாதப்பொருத்துகள்,
மறுசட்டத்தினடியில் இரு பாதப்பொருத்துகள் என்று
எட்டுச் சட்டங்களுக்குப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகள் வேண்டும்.


26 சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்கள் செய்வாய்.
திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும்,
27 திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும்,
மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே ஐந்துமாகக்
குறுக்குச் சட்டங்கள் பொருத்துவாய்.
28 நடுவிலுள்ள குறுக்குச் சட்டம்,
பலகைகளுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்குச் செலுத்தப்படவேண்டும்.
29 சட்டங்களைப் பொன்னால் பொதிவாய்;
அவற்றில் குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்காக
வளையங்களைப் பொன்னால் செய்;
குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிவாய்.
30 இவ்வாறு மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட திட்டப்படி
திருஉறைவிடத்தை நிறுவுவாய்.


31 மேலும் ஒரு திருத்தூயகத் தொங்குதிரை செய்யப்பட வேண்டும்.
அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட வேண்டும்.
அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
32 அதனை நான்கு சித்திம் மரத்தூண்களில் தொங்கவிடுவாய்.
இவை பொன் வளைவாணிகள் கொண்டவை;
பசும்பொன்னால் மூடப்பட்டு நான்கு வெள்ளி பாதப்பொருள்களில் நிற்பவை.
33 கொக்கிகளில் அந்தத் திரையைத் தொங்கவிடு;
அதற்கு உட்புறமாக உடன்படிக்கைப் பேழையை வைப்பாய்.
இவ்வாறு தொங்குதிரை தூயகத்தையும் திருத்தூயகத்தையும் பிரிக்கும். [*]
34 திருத்தூயகத்தில், உடன்படிக்கைப் பேழையின்மேல்
இரக்கத்தின் இருக்கையை அமைப்பாய்.
35 தொங்குதிரைக்கு முன்புறம் ஒரு மேசையையும்,
மேசைக்கு எதிரே, திருஉறைவிடத்தின் தென்புறம்,
விளக்குத்தண்டையும் வைப்பாய்;
மேசையையோ வடபுறம் வைப்பாய்.
36 கூடாரத்தின் நுழைவிடத்திற்காக ஒரு தொங்குதிரை செய்வாய்.
அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும்,
பின்னல்வேலை கொண்டதாகச் செய்யப்பட வேண்டும்.
37 இத்திரையைத் தொங்கவிடுவதற்காக,
ஐந்து சித்திம் மரத்தூண்களைச் செய்துவை.
இவை பசும்பொன்னால் மூடப்பட்டனவாயும்,
பசும்பொன் வளைவாணிகள் கொண்டனவாயும்,
ஐந்து வெண்கலப் பாதப்பொருத்துகளில் நிற்பனவாயும் அமையட்டும்.


குறிப்பு

[*] 26:33 = எபி 6:19; 9:3-5.


அதிகாரம் 27[தொகு]

பலிபீடம்[தொகு]

(விப 38:1-7)


1 சித்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய்.
நீளம் ஐந்து முழம், அகலம் ஐந்து முழமாகப்
பலிபீடம் சதுரவடிவமாய் இருக்கட்டும்.
அதன் உயரமோ மூன்று முழம்.
2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் அமைப்பாய்.
கொம்புகளும் பலிபீடத்தின் பாகமாகவே விளங்கும்.
பின் அதை வெண்கலத்தால் மூடு.
3 பின்னர் அதைச் சார்ந்த சாம்பல் சட்டிகள், அள்ளுகருவிகள்,
பலிக் கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள்
ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்வாய்.
4 அதைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து,
அத்தோடு இணைப்பாய்.
நான்கு மூலைகளிலும் நான்கு வளையங்களைப் பொருத்துவாய்.
5 பலிபீடத்தின் பாதிப் பகுதியை எட்டும்படி
அதன் விளிம்புக்குக் கீழே வலைப் பின்னலைப் பொருத்து.
6 பலிபீடத்தின் தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து,
அவற்றை வெண்கலத்தால் மூடுவாய்.
7 பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக
அதன் இரு பக்கங்களிலும் இத்தண்டுகள் வளையங்களில் செலுத்தப்படும்.
8 பலகைகளைச் சேர்த்து உள்கூடாகப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும்.
மலைமேல் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அது செய்யப்படட்டும்.

திருஉறைவிட முற்றம்[தொகு]

(விப 38:9-20)


9 திருஉறைவிட முற்றத்தை நீ உருவாக்குவாய்.
தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி முறுக்கேற்றி நெய்த
மெல்லிய நார்ப்பட்டால் செய்த தொங்கு திரைகளை
நூறுமுழ நீளத்திற்குப் போடவேண்டும்.
10 அதற்கு இருபது தூண்களும்,
வெண்கலத்தில் இருபது பாதப் பொருத்துகளும்,
தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும், பூண்களும் தேவை.
11 அவ்வாறே, வடபக்கத்தில் நூறு முழ நீளமான தொங்குதிரைகளும்,
அவற்றுடன் இருபது தூண்களும்,
இருபது வெண்கலப் பாதப் பொருத்துகளும்,
தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும் பூண்களும் தேவை.
12 மேற்குப் பக்கத்தில் முற்றத்தின் அகலப்பகுதி
ஐம்பது முழத் தொங்குதிரைகளாலும்,
அதற்கான பத்துத் தூண்களாலும்
பத்துப் பாதப் பொருத்துகளாலும் அமையும்.
13 கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கிய முற்றத்தின் அகலம் ஐம்பது முழம்.
14 அதன் ஒரு பகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும்
மூன்று தூண்களாலும், மூன்று பாதப் பொருத்துகளாலும் அமையும்.
15 மறுபகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும்,
மூன்று தூண்களாலும், மூன்று பாதப்பொருத்துகளாலும் அமைக்கப்படும்.
16 நடுப்பகுதியில், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும்,
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும்
பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த இருபது முழத் தொங்குதிரை
முற்றத்தின் நுழை வாயிலாக விளங்கும்.
அதற்காக நான்கு தூண்களும், நான்கு பாதப் பொருத்துகளும் அமைக்கப்படட்டும்.
17 முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தூண்களுமே
வெள்ளியால் மூடப்பட்டிருக்கும்.
அவற்றின் கொளுத்துகள் வெள்ளியாலும்
பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலும் செய்யப்படும்.
18 முற்றத்தின் நீளம் நூறு முழம். அகலம் ஐம்பது முழம். உயரம் ஐந்து முழம்.
திரைகள் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலானவை.
பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலானவை.
19 திருஉறைவிடத் திருப்பணிகளுக்கான அனைத்துப் பொருள்களும்
அங்குள்ள கொளுத்துகளும்,
முற்றத்திலுள்ள எல்லாக் கொளுத்துகளும் வெண்கலமாய் இருக்கும்.

விளக்கைப் பேணுதல்[தொகு]

(லேவி 24:1-4)


20 விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய்
கொண்டு வரப்பட வேண்டுமென்று இஸ்ரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய்.
21 சந்திப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள
தொங்குதிரைக்கு வெளியே, அணையாவிளக்கு எரிந்துகொண்டிருக்கட்டும்.
ஆரோனும் அவன் புதல்வரும் இரவிலும் பகலிலும்
அதைக் கவனித்துக் கொள்ளட்டும்.
தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்களுக்கிடையில்
மாறாமல் நிற்கும் சட்டம் இது.


(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 28 முதல் 29 வரை