பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93


மாந்தர் ஒன்றிய, ஒரே உலகச் சமூதாயத்தினராய் வாழ வேண்டுமெனில், அவர்கட்குள் சாதிவேற்றுமை - சமயவேற்றுமை முதலியன போன்ற எத்தகைய வேறுபாடும் இருக்கவே கூடாது. ஒருவர்க்கு ஒருவர் ஒத்து உதவிசெய்து வாழ வேண்டும். சுருங்கக் கூறின், தன்னுயிர் போல் மன்னுயிரைப் போற்றல் வேண்டும். இன்னபிற நெறிகளைப் பின்பற்றின், சமுதாய ஒருமைப்பாடு நின்று நீடித்து நிலைப்பது உறுதி. இந்தக் கருத்துக்களை வள்ளுவரும் வள்ளலாரும் ஒத்துப் பல கோணங்களில் பகர்ந்து சென்றுள்ளனர். அவற்றுள் முதலாவதாக சாதி சமய வேற்றுமை கூடாது என்னும் உயரிய கொள்கையை நோக்குவோமே.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”(972))

“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்"

"மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு"(409)

முதலிய குறள்களின் வாயிலாக, வள்ளுவர் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் சாதி வேற்றுமையைச் சாடுகிறார். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பெரிய கருத்து. எல்லாரும் பிறப்பினால் ஒரு தன்மையினரே; செயலினாலேயே வேறுபடுகின்றனர்-என்னும் உயரிய கொள்கையைக் குறள்கள் கூறுகின்றன.

இவ்வாறாகத் திருவள்ளுவர் சாதிவேற்றுமை பாராட்டாதது போலவே. சமய வேற்றுமையும் பாராட்டவில்லை திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பகுதியைப் பார்க்கின் இந்த உண்மை புலனாகுமே. அவர் அந்தப் பகுதியிலே