பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


களைக் கவர்ந்து வாகை மாலை சூடி குலோத்துங்கன் அடியை வணங்கி நிற்கின்றான். இப் பகுதியில் வீரச் சுவை செறிந்துள்ளது.

போரைச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களத்தை வந்து காணுமாறு அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்று காளிதேவி பேய்கள் சூழ களத்திற்கு வந்து பல்வேறு காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுகின்றாள். காட்சிகளைக் கண்டு களித்த பிறகு தேவி நீராடிக் கூழ் சமைத்து உண்ணுமாறு பேய்களைப் பணிக்கின்றாள். அங்ஙனமே பேய்கள் பல் துலக்கி, நீராடிக் கூழ் அட்டு உண்ணுகின்றன. உண்டபின் பேய்கள் வள்ளைப் பாட்டுக்களால் குலோத்துங்கன் புகழ்பாடி வாழ்த்துகின்றன.

யாவ ரும்களி சிறக்கவே தருமம்
எங்கும் என்றும் உள தாகவே
தேவர் இன்னருள் தழைக்கவே முனிவர்
செய்த வப்பயன் விளைக்கவே[1]

வேத நன்னெறி பரக்கவே அபயன்
வென்ற வெங்கலி கரக்கவே
பூத லம்புகழ் பரக்கவே புவி
நிலைக்க வேபுயல் சுரக்கவே[2]

[களி-மகிழ்ச்சி; அருள்-மக்கள் மாட்டு வைக்கும் அருள் ; பரக்க-எங்கும் பரவுக; கலி-துன்பம் : கரக்க-தலை காட்டாது மறைக; புகழ்-புகழ்ச் செயல்கள் ; நிலைக்க-கலங்காமல் நிலை பெறுக.]

என்ற வாழ்த்துடன் நூலும் முற்றுப் பெறுகின்றது.


  1. தாழிசை-595,
  2. தாழிசை-596.