323
திருமுல்லை வாயிலை அடைந்த வள்ளலார், அங்கு எழுந்தருளியுள்ள பெருமானை நோக்கி அம்முதல்வனது திருவருளினியல்பை வினவுவதாக அமைந்தது,
தேன் என இனிக்கும் திருவருட் கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான் என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில் வாழ் மாசிலா மணியே
ஊன் என நின்ற உணர்விலேன் எனினும்
உன் திருக்கோயில் வந்தடைந்தால்
ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ
எனவரும் திருவருட்பாவாகும்.
திருவொற்றியூரில் எழுந்தருளிய எழுத்தறியும் பெருமானை நோக்கித் தம் துயர்துடைத்தருள வேண்டு மென இரந்து முறையிடும் முறையில் வள்ளலார் பாடியது, எழுத்தறியும்பெருமான் மாலை என்னும் பனுவலாகும். உலகியல் வாழ்வில் இன்னல் பல உற்றவர்கள் இறைவன் முன்னிலையில் நின்று போற்றிப் பரவுவதற்கேற்ற எளிய தமிழ்நடையில் அமைந்தது இம்மாலையாகும். இதன் முதற்பாடல்,
சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்கா ளாக்காதே
நிந்தையுறும் நோயால் நிகழ வைத்தல் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே
என்பதாகும்.
ஞானாகாயப் பெருவெளியில் திருக்கூத் தியற்றியருளும் நடராசப் பெருமானைக் குருவாகப் போற்றும்