பக்கம்:நூறாசிரியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரட்டி எழுதப் பெற்றது இந்நூல். உண்மையும் திண்மையும் வாய்ந்த கருத்துகளை யாவரும் அறிதற்பொருட்டு இந்த யாப்பைத் தேர்ந்தெடுத்தேன். பாத்தளைகளால் பெரிதும் கட்டப்பெறாமல் சிறுசிறு சீர்களால் தொடுக்கப் பெற்ற பா வடிகள் நிரம்பியவாகலின் இப்பாக்கள் அருமுயற்சியின்றி ஐந்தாறு முறை படித்த அளவிலேயே மனத்தகப்படுக்கும் தன்மை வாய்ந்தவை. இவற்றின் பிற சிறப்புகள் படிப்பாளின் உணர்வுக்கும் அறிவுக்கும் கண்ணோட்டத்திற்கும் உரைகற்களாக நிறுத்தப்பட்டன.

இதிலுள்ள நூறு பாக்களும் வேறு வேறு கருத்துகள் பற்றியியங்குவன. பாடல்கள் அகம் புறம் என்னும் இருதிணைகளாகவும், பல்வேறு துறைகளாகவும் பகுக்கப்பெற்றுள்ளன. காலம் ஒட்டிச் சில புதுமுறைக் கருத்துகளும் இதில் சேர்க்கப்பெற்றுள்ளன.

பாடல்களுக்குப் பொழிப்பும் விரிப்பும் கொடுக்கப் பெற்றுள்ளன. தமிழ் நலம் நாடுவோர்க்கும். இலக்கிய நலந் துய்ப்பார்க்கும் அவை பெரிதும் துணையாகவிருக்கும். புரையும் கறையும் நிறைந்த போலி இலக்கியப் படைப்பு மிகுந்த இக்காலத்து நிறையும் விரையும் கலந்த இத்தகைய நூற்கள் வாழ்க்கைக்கு ஒளியும் வழியும் காட்டுவன என்பதைப் படிப்பார் தெள்ளிதின் உணர்வார்.

நூறாசிரியம் - முதல் பகுதி எனும் இந்நூல், முதற் பத்துப் பாட்டுகளையும் உரைகளையுமே கொண்டது.

இது, நெடுநாளைய தென்மொழி அன்பரும், சிறந்த தனித்தமிழ்ப் பற்றாளரும், புலவரும் ஆகிய வண்ணாங்குண்டு, திரு.சிவசண்முகம்- செல்வி கலாவதி ஆகியோர் திருமண விழாவில் வெளியிடப் பெறுகிறது. தம் திருமண மங்கல விழாவின் அன்புப் பரிசாக இதனை அச்சிட்டு வழங்குவித்த மணமகன் புலவர் திருசிவசண்முகம். அவர்களுக்கும், அவர்களின் தமிழ் விழைவிற்கிசைந்த - அவர் தந்தையார், திரு. அமு.இராமமூர்த்தி அவர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும் என்றும் உரியவாகுக.

திபி 2010. விடை, 24 (7-5-79)


இரண்டாம் பதிப்பு முன்னுரை

உரைநடை என்பது ஒரு செடி போன்றது என்றால் அதன் பூக்களைப் போன்றவையே பாடல்கள்.

முழுமையான பொருள் தரும் பொருத்தமான அழகிய சொற்கள். தகுதியான முறையில், நிரல் நிறையாக உணர்வு ஒழுங்கிற்கு ஏற்ப அமைக்கப் பெறுவதே பாட்டு. இதில் கருத்துகள் பூக்களின் மணத்தைப் போன்றவை.

உரைநடையில் தனித்த ஓர் அடியே முழுப்பொருளையும் தந்துவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/6&oldid=1210060" இலிருந்து மீள்விக்கப்பட்டது