பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1. தமிழ் மொழியைப் பயிற்றும் நோக்கங்கள்

இவ்வுலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. பிறந்தது முதல் இறக்கும்வரை, தொட்டிலிலிருந்து சுடுகாடுவரை, ஒருவர் கேட்டும் பேசியும் வரும் மொழியே தாய்மொழி எனப்படும். குழந்தைக்கு இயல்பான மொழியும் அதுவே. ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் பொழுதும், தாலாட்டும்பொழுதும், சீராட்டிப் பாராட்டும் பொழுதும் பேசும் மொழியைத்தானே தாய்மொழி என்று சொல்லவேண்டும்? இச்சிறப்புக் கருதியே நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியை ஆன்றோர் 'பால்வாய்ப் பசுந்தமிழ் ' என்று சிறப்பித்துள்ளனர்.

மொழி சமூகத்தில்தான் வளர்ச்சிபெறும் ; மொழி இன்றேல் மக்கள் சமூகமாக இயங்க முடியாது. எனவே ஒன்றுபட்ட பொது வாழ்க்கைக்கு மொழி இன்றியமையாதது என்பது பெறப்படுகின்றது. அன்றாட வாழ்க்கையில் ஒருவரோடு ஒருவர் உறவாடுவதற்கு மொழியே சிறந்த கருவியாக அமைகின்றது. சாதாரண மக்கள் முதலில் பேசத் தொடங்கிய தாய் மொழியையே ஒரு சிறந்த கருவியாகக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக நாம் நமது எண்ணங்களைப் பேச்சு மூலமாகவும் எழுத்து மூலமாகவும் வெளியிடுவதற்கு நமது தாய்மொழியையே கையாளுகின்றோம். பல்வேறு வகைப்பட்ட கொள்கைகள், சமயங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், குலங்கள், நிலைகள் தொழில்கள் ஆகியவற்றால் வேற்றுமையுற்ற பல பிரிவினர்களும் பேசும் தாய்மொழியால் ஒன்றுபடுவதைக் காணும்பொழுது தாய்மொழியின் பேராற்றலே என்னவென்று கூறுவது ? இத்தகைய சிறப்பு வாய்ந்த தாய்மொழி, கல்வித்