38 ♦ இல்லம்தோறும் இதயங்கள்
நினைச்சுக்கிட்டு இருக்கோம். இதுக்காவே நானே அப்பாகிட்ட வாதாடி சம்மதம் வாங்கியிருக்கேன். நாங்க ஒற்றுமையா இருக்கது ஒனக்குப் பிடிக்கலியாக்கும். இதக் கெடுக்கதுக்காவ மெனக்கெட்டு ரயில் ஏறி வந்தியாக்கும்?” மணிமேகலை திகைத்துப் போனாள். கல்யாணம் ஆகுமுன்னால் அண்ணிக்காரியிடம், இப்படிப்பட்ட சுடு சொற்களை அவள் வாங்கி இருந்தாலும், இப்போது அவள் பேசியது, அவள் சுயமரியாதையை எரித்தது. அண்ணன்காரன் வேறு சும்மா இருந்தார். எதோ காரமாகப் பேசப் போன மணிமேகலை, அப்பாவைப் பார்த்தாள். அந்த முகத்தைப் பார்த்ததும் அவளால் பேச முடியவில்லை.
அந்த நெடிய-கொடிய மெளனத்தில், அருணாசலம் தலையைப் பிடித்துக்கொண்டே யோசித்தார்.
பல தென்னந் தோப்புக்கள், மாந்தோப்புக்கள், ஊருக்கே உணவளிக்கும் அளவுக்கு நிலபுலனும் கொண்ட தன்னைவிட, செல்வச் செருக்கில் அவருக்கு அடுத்தபடியான அளவுக்கு வசதியுள்ள குமரேசன், தன் மகன் வெங்கடேசனுக்கு பெண் வீட்டார்தான் முதலில் கேட்க வேண்டும் என்ற வரம்பையும் மீறி மணிமேகலையைக் கேட்டார். ‘இவன் நமக்கு ஜோடியா’ என்று மனதுக்குள்ளே நினைத்த இதே இந்த அருணாசலக் கிழவர், மகளை அரக்கோணத்தில் ஒரு எஞ்ஜினியருக்குக் கட்டிக் கொடுத்தார்.
மாப்பிள்ளை வீட்டார், முப்பது வருடத்திற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக அரக்கோணம் போய், இரண்டு மூன்று வீடுகளுடனும், ஒரு சின்ன தொழிற்சாலையுடனும், காரோடும் பங்களாவோடும் இருப்பதில், இப்போது அவருக்குப் பெருமையில்லை. ஆண்டுக்கணக்காக மகளை வளர்த்துவிட்டு, இப்போது ஆண்டுக்கு ஒருமுறை மகளைப் பார்க்கும்