நீரில், நிலத்தில், நிழற்காவில், பூம்புதரில்,
ஊரில், உடலில், உடலுயிரில்,-கார்வானிற்
1
பொன்செய்தான் கீழ்வான் புதுப்பரிதி!தைத்திங்கள்
பொன்செய்யும் புன்செய்யுள்; நன்செய்யுள் !-மின்னே!
2
கரும்பும், குலைவாழைக் காயும் பழுக்க,
அரும்பும் மலர்ந்த(து) அலர்ந்த-பெருஞ்சிரிப்பைக்
3
காட்டி, உனதுவிழி காட்டி உடலுயிரை
வாட்டி வதைக்க மகிழ்ந்தேன்நான் !-ஈட்டும்
4
பெருஞ்செல்வம் யார்தந்தார்? கேளேன்! பரிதி
தருஞ்செல்வம்! இல்லையெனச் சொல்வோர்-ஒருவர்
5
உளரேல், அழைத்துவா! ஒன்றவர் நம்மை
அளறில் அமுக்கிய செல்வர் ;-களங்காணா(து)
6
ஏய்த்துப் பிழைக்கும் இழிகுணத்தோர் ஆவரே!
தீய்த்துப் பொசுக்குவோம்! தீமையை-மாய்த்து நாம்
7
வெற்றி முரசம் முழக்குவோம்-விண்ணெழுந்த
பொற்கதிர் வாழ்த்திப் புதுப்பொங்கல்-சுற்றி
8
இருப்போர் அனைவர்க்கும் ஈவோம்! மகிழ்ந்தே
திருநாட்டை மீட்கத் திரண்டு -பெரும்படையாய்
9
வருவீர்! வருவீர் தமிழ்க்குலத்து மங்கையரே!
தெருவில் தமிழ்வாழ்த்து வோம் !
10
29