பக்கம்:தம்ம பதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

 பள்ளிகள் நிறைந்திருந்தன. காஞ்சீபுரம், நாகைப்பட்டினம், மதுரை முதலிய பெரு நகரங்களிலெல்லாம் பெளத்தம் நிலைபெற்றிருத்தது. தமிழ்ப் பிக்குக்கள் இலங்கை முதலிய வெளி நாடுகளுக்குச் சென்று சமயப் பிரசாரம் செய்து வந்ததுடன், பல பெளத்த நூல்களையும் இயற்றி வைத்தனர். இவர்களுள் தர்மபால ஆசாரியர், ஆசாரிய புத்த தத்த தேரர், போதி தருமர் முதலியோருடைய, புகழ் இன்றும் மங்காது இருந்து வருகிறது. போதி தருமர். காஞ்சிபுரத்திலிருந்து சீனா சென்று பெளத்த தருமப் பிரசாரம் செய்தவர். மேலும், கோவலனுடைய தந்தையாரான மாசாத்துவர் பெளத்தர். மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு பெளத்தப் பிக்குணியாக வாழ்ந்தாள். இளம் போதியார், சீத்தலைச் சாத்தனார் முதலிய பல தமிழ்ப் புலவர்கள் பெளத்தராயிருந்தனர். மற்றும், புத்த மங்கலம், போதி மங்கலம் சங்க மங்கலம், புத்த குடி முதலிய பல தமிழ் நாட்டு ஊர்களின் பெயர்களைப் பார்த்தாலே இங்கு பெளத்தம் நிலவியிருந்த பெருமை தெளிவாக விளங்கும்.

தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான 'மணிமேகலை’ பெளத்த நூல். 'மணிமேகலைச் சொல்லெலாம் அறம்; பொருளெலாம் அறம்; மணிமேகலையின் நாடெலாம் அறம்; காடெலாம் அறம். புத்தர் பெருமானைத் தமிழிற் காட்டும் ஒரு மணி நிலையம் மணிமேகலை’ என்று தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாணசுந்தரர் அதைப் புகழ்ந்துள்ளார். ‘வளையாபதி’ யும் ‘குண்டலகேசி’ யும் முழு நூல்களாக அகப்படாமலே போய்விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/13&oldid=1361791" இலிருந்து மீள்விக்கப்பட்டது