பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தன் ⚫ 269

பெருமான் அன்று சகோதரனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும் என்று புறப்பட்டவராதலால், நந்தன் நழுவிச் செல்வதை உள்ளத்தில் உணர்ந்து, தாமும் கூட்டத்தை விட்டு வெளியேறி, விரைவாகக் தம்பியைத் தொடர்ந்து சென்றார்

நந்தன் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கையில், அருள் முனிவர் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கண்டு, திரும்பி வந்து அவரை வணங்கினான். ‘நான் அரண்மனை மாடியிலிருந்தபோது தாங்கள் வந்தீர்களாம். அரண்மனையில் தங்களை வரவேற்கும் பேறு எனக்குக் கிடைக்காமற் போய்விட்டது! இப்பொழுது நண்பகலாகிவிட்டதால் என்னுடன் வந்து அமுது செய்ய வேண்டுகிறேன்!’ என்று வள்ளலை அன்புடன் அழைத்தான்.

ததாகதர் பசியில்லையென்று சமிக்கையால் காட்டினார். நந்தன் மீண்டும் அவரை வணங்கிவிட்டுப் புறப்பட ஆரம்பித்தான். அண்ணல் தமது பிச்சைப் பாத்திரத்தை, அவன் கையிலே கொடுத்தார். அதைக் கையில் வாங்கி வைத்துக் கொண்டே, அவர் வேறு திசையில் எதையோ பார்த்து நிற்கையில், நந்தன் மெல்ல அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் அந்தச் சந்தைக் கடந்து செல்ல முடியவில்லை. அவன் மேலே நடக்க முடியாமல் அண்ணலின் ஆற்றல் அவனைத் தடுத்து நின்றது. உலகத்தின் துன்ப வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கு இன்றியமையாத அறிவு அவனிடம் குறைந்திருப்பதையும், புலன் இன்பங்களிலே அவன் உள்ளம் வெறிகொண்டு மூழ்கியிருப்பதையும் எண்ணி, ஐயன் தமது மகிமையால் அவனைத் தம்மோடு வருமாறு கட்டாயப்படுத்தினார்.