உத்தராயணம் 13
நானும் பக்கத்தில் அமர்கிறேன். பாஷையே பரிபாஷை, உண்மைக் காரணம் எங்களுக்குத் தெரியும். ஆனால் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டோம், உள்ளேயிருந்து குரல்கள் வேணுமென்றே எங்களுக்குக் கேட்கும்படிக் கிசுகிசுக்கின்றன.
“”அம்மாவும் பிள்ளையும் பேசிக்கறா பார்த்தையா?”
நாங்கள் எங்கே பேசிக்கிறோம்? எங்களைப் பிணைக்கும் மெளனச் சரடே எங்கள் பேச்சென்றால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்.
'அம்மாவும் பிள்ளையும்’ என்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருள்படுத்துவது வேறு, பல்லைக் கடித்துக் கொண்டு “கிழங்கள்! அசடுகள்!”
அட இங்கே இன்னொரு செட் கிளம்புகிறதே!
சாந்தா, தோள்பட்டையில் மேலாக்கு மடிகளைச் சீண்டியவண்ணம், “அப்பா, கட்டை தொட்டி நாடார் டி.வி. செட் புதுசா வாங்கியிருக்கார். எங்களை வரச்சொன்னார். போயிட்டு வரோம்.”
என் புருவங்கள் என்னையுமறியாமல் கேள்வியில் உயர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், காட்சி முடிந்து திரும்பப் பத்து, பத்தரை ஆகிவிடுமே! தனி வழி, பெண்டுகள், இரவு வேளை...
“அதெல்லாம் ஒண்ணுமில்லை.”-வெடுக்கென்கிறாள். இத்தனைக்கும் நான் வாய் திறக்கவில்லை. ஆனால் சாந்தா இந்த வருடம் 10+1. ஏற்கெனவே நிறைய மார்க்கு வாங்குவாள். ஆகையால் நான் வாய் திறக்குமளவுக்கு அவள் மக்கு இல்லை. என் வாயை அடைக்கவும் அவளுக்குத் தெரியும். பக்கபலம் வேறு இருக்கிறதே!
முன் நிலாத்தான் நியூஸ் வரைக்கும் இருக்கமாட்டோம் மெயின் முடிஞ்சவுடனே திரும்பிடறோம். அப்பா, நீங்கள் டி.வி. வாங்கியிருந்தால், பிறத்தியார் வீட்டில் எங்களுக்கென்ன வேலை?”