பதிப்புரை பத்தரைமாற்று இலக்கியத்தில் பூவேலைக்காவது ஓரளவு இடமுண்டு. பூச்சு வேலைக்கு இடமே கிடையாது. திரு.லா.ச.ராமாமிருதத்தின் படைப்புகளில் பூவேலைகூட இடமறிந்து, அளவறிந்துதான் காணப்படும். மற்றபடி அதில் சத்தியத்தின் தண்ணொளி ஜ்வலிப்புதான்.பண்புகளுக்கு உருவமில்லை. அவை அருவங்கள். அவற்றின் சாயைகள் சூட்சுமமானவை. திரு லா. ச. ராவின் எழுத்தொளியில் பண்புகளின்உயிர்ப் பண்புகளின்- சூட்சுமச் சாயைகள் பிறக்கும் போது, அவை வாசகர்களின் உட்புலன்களின் மேல் படரும்போது ஏற்படும் கூச்சம் திரு லா.ச.ரா-வுக்கு முன் தமிழுக்குப் புதிது; இன்று தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் ஆதாரம். திரு லா. ச. ரா-வின் எழுத்து, அவருடைய பாஷையில், தன்னுடைய நாளைக் கண்டுவிட்டது. ஆகவே அது வாசகர்களின் நாளை அடையாளம் கண்டுகொண்டு, அதனுடன் ஒன்ற முடிகிறது. வாசகர்களுக்கு அவருடைய கதைகளில் ஏற்படும் பரவசத்திற்கு இதுதான் காரணம்.