பொங்கும் அலைகடலில்பொன்பொங்கத் தீவளர்த்துத்
தங்கப் பரிதி தலைநிமிர்ந்தான்! இல்லமெலாம்
பொங்குதடா இன்பம்! புதுப்பானைப் பச்சரிசிப்
பொங்கலோ பொங்கல்!பெரும்பொங்கல்!வாழியவே!
1
ஓடை இசைக்க உயர்ந்து நகைகாட்டித்
தோடவிழ்க்கும் தாமரையின் தோள்தழுவும் செங்கதிரை
மாடுழுத நன்செய் வளம்பெருக்கும் பொற்கதிரை
நாடிஇடும் நற்பொங்கல் நன்னாளும் வாழியவே!
2
குட்டை குளஞ்செடிகள் ன்னற் குலைவாழை
மட்டை விரிதென்னை மாப்பபரிதி செங்கதிரை
இட்டுமெரு கிட்டின்பம் இட்டுவரக் கன்னியர்கள்:
பட்டுடுத்திப் பால்சொரியும் தைப்பொங்கல்,வாழியவே!
3
ஒடுக்கும் குளிர்பனியை, ஊர்நிலவும் மையிருட்டை
ஒடுக்கினாள் ஒண்பரிதி! வாழ்வும் உயர்ந்ததுவே!
கடுவில்லா நங்கையர்கள் நற்றமிழாம் தேனூற
இடும்பொங்கல், இன்பத் தமிழ்ப்பொங்கல் வாழியவே!
4
அரும்பு மளமீசை ஆளன் அகங்குளிர
அரும்பு நகைகாட்டிப் பொங்கல் அமுதூட்டிக்
கரும்பு கரும்பொடித்தே கண்ணீரைச் சிந்துமிளங்
கரும்பிற் களிக்கும் பெரும்பொங்கல் வாழியவே!
5