மெழுகுச் சிறகுகள் 9 மகன் பேச்சு தாயவளைத் தூண்ட லாச்சு ! மற்றவர்போல் எனக்குள்ள பாசத்துக்கும் நகம் சதையாய்ஒட்டியுள்ள பந்தத் துக்கும் நாளைமுதல் தொடர்பில்லை ! தானே தனிதான் ! முகம்மெல்லாம் துளிர்க்கின்ற வியர்வைத் துளிகள் மூச்செழுந்தே ஆடுகின்ற முதிய மார்பு அகம் முழுதும் பரவுகின்ற துயரம் தன்னை அச்சடித்துக் காட்டிடவே கிழவி தவித்தாள்! பழகிவந்த சுற்றங்கள்; நட்பு: வாழ்க்கைப் படகாக மிதந்திருந்த வீடு; தனக்கு முழு உதவி நாள்தோறும் தந்து வந்து முறை தவறாக 'கருப்பம்மா'; 'மருந்துப்பெட்டி'; அழகுமணித் தேர்போன்ற பேரப்பிள்ளை; ஆசைமகன்; அவன்துணைவி எல்லோரிடத்தும் தழுதழுத்தக் குரலினிலே புலம்பித் தேம்பிச் சட்டத்தின் அடிபணியத் துவங்க லானாள் ! கிழவியவள் 'நண்டுக்கால் தீவு செல்லக் கிளம்புகின்ற தருணத்தில் அரண் மனையில் அழைத்ததாக ஓடிவந்தே ஒருவன் கூற 'அம்மா இனித் தயங்காதே போய்வா!' என்றே குழறியபடி புவிநெஞ்சன் ஆள்பின் போனான்! கும்பிட்டே அத்தையவள் காலில் வீழ்ந்தே அழுதிட்ட மருமகனைப் பேர னோடே அணைத்தபடி வாழ்த்துரைகள் சொன்னாள் எழுந்தாள்!