பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தியாகங்களால் மக்கள் உணர்வைத் திரட்டிய பின் நடத்தப்படும். அதற்கு ஒரு உதாரணம் ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன், வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 95 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளைக் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார் அந்தக் காலத்தில் ஏறக வேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக் கிணங்கக்கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல், எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும், அதனால் அதிகாரியான சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதத்தையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள் இதே சாசனத்தின் பிரதி உத்தனூரிலிருந்து கிடைத்துள்ளது (கோயில் சாசனங்கள் முன்னுரை).

பெரிய விஷயத்தார் என்பவர் நாட்டாரின் பிரதிநிதிகள். மக்களின் கிளர்ச்சி வலுப்படவே மேல் வர்க்கப் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள்கூட மக்களின் கோரிக்கைகளை ஆதரித்தன. இந்நிகழ்ச்சி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும், நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயதம் தாங்கிப் போராடியுமிருக்கிறார்கள். அரசனது ஆணைகளும், சபையாரின் முடிவுகளும், கோவில் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததால், இம்முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகச் சில சமயங்களில் மக்கள் கோவில் சுவர்களை இடித்து கல்வெட்டுகளை அழித்திருக்கிறார்கள். அநியாயமான நிலப் பரிவர்த்தனைகள், கோயில் மூர்த்தியின் பெயராலோ, சாண்டேசுவரா பெயராலேயோ,

26